2. தமிழர் பெற்ற தனிச் செல்வம்
(அகப்பொருள் )
தமிழ் இலக்கணம்
தேனினும் இனிய நம் தமிழ்மொழி மிகப்பழையது. அது மிகப் பழங்காலந் தொட்டே வழங்கி வருவது. இங்ஙனம் பழமையும் பெருமையும் வாய்ந்த மொழியான தமிழ் நன்கமைந்த இலக்கண வரம்பையுடையது. நீராலும் நெருப்பாலும் அழிந்தனபோக இப்போது எஞ்சியுள்ள நூல்கள் சில. அவற்றுள் மிகப் பழமை வாய்ந்தது ஒல்காப் புலமை பெற்ற தொல்காப்பியர் இயற்றிய ‘தொல்காப்பியம்’ என்னும் இலக்கணமே ஆகும். அஃது எழுத்து, சொல், பொருள் என்னும் முப்பிரிவுகளை உடையது. பிற்காலத்தார் தமிழிலக்கணத்தை எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐம்பிரிவுகளாகப் பகுத்து வழங்கினர். தொல்காப்பியர் காலத்தே ‘யாப்பு, அணி’ எனத் தனி நூல்கள் இல்லை.
‘எழுத்து, சொல், பொருள்’ என்னும் மூன்று இலக்கணப் பிரிவுகளிலும் இறுதியாகவுள்ள பொருள் இலக்கணமே சாலச்சிறந்தது. ‘இறையனர் அகப்பொருள்’ என்னும் நூலில், “எழுத்தும் சொல்லும் ஆராய்வது பொருள் அதிகாரத்தின் பொருட்டன்றே! பொருளதிகாரம் பெறேம் எனின், இவை பெற்றும் பெற்றிலேம்,” என்னும் வாக்கியம் காணப்படுதலை நோக்க, அக்காலத்