பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

தமிழ் காத்த தலைவர்கள்

சேரநாட்டிற்கு வந்த சாத்தனார், செங்குட்டுவனையும் இளங்கோவடிகளையும் கண்டு மகிழ்ந்தார். அவர்களிடம் மதுரைமாநகரில் நடந்த செய்திகளை விளக்கிச் சொன்னார்; கோவலன், கண்ணகி வரலாற்றையுங் கூறினார்.

சிலப்பதிகாரம் தோன்றல்

இச் செய்திகளை இளங்கோவடிகள் ஆர்வமுடன் கேட்டார். கோவலன், கண்ணகி வரலாறு சிறந்த உண்மைகளை விளக்குவதை அவர் அறிந்தார். ‘அரசன் நீதி தவறினால் அவனை அறக்கடவுள் தண்டிக்கும். கற்புடைய பெண்களைக் கற்றோர் போற்றுவர். ஒருவனது ஊழ்வினை அவனைத்தொடர்ந்து வந்து பயனை ஊட்டும்.’ இம் மூன்று உண்மைகளை அவ்வரலாறு நன்கு விளக்குவதைக் கண்டார். ஆதலின் அதனை ஒரு நூலாக இயற்றத் துணிந்தார். சங்கப் புலவராகிய சாத்தனார் கூறிய வரலாற்றை யாய்ந்து முறைப்படுத்தி முப்பது. காதைகளாகப் பகுத்து நூலை அழகாக இயற்றினார். அதற்குச் சிலப்பதிகாரம் என்ற சிறந்த பெயரைச் சூட்டினார். இது தமிழில் உள்ள இனிய காவியம் ஆகும். இது தமிழ்த்தாயின் பாதத்தில் அணிந்த சிலம்பாக விளங்குகிறது.