பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

தமிழ் காத்த தலைவர்கள்

 ராசச் செட்டியார், ஆறுமுகநாவலர் போன்ற புலவர்கள், தேவருடைய உதவியைப் பெரிதும் பெற்றவர் ஆவர். ஆறுமுக நாவலர்க்குப் பெரும் பொருளை அளித்துத் திருக்குறள், திருக்கோவையார், சேதுபுராணம் ஆகிய நூல்களைப் பதிப்பிக்குமாறு செய்தார்.

தேவரின் மக்கள் மூவர்

இவ்வாறு தமிழைக் காத்த தலைவராகிய பொன்னுச்சாமித் தேவருக்கு ஆண்மக்கள் மூவர் பிறந்தனர். அவர்கள் கோட்டைச் சாமித் தேவர், சீமைச்சாமித் தேவர், பாண்டித்துரைத் தேவர் என்போர் ஆவர். அவர்கள் மூவரும் மூவகையில் சிறந்து விளங்கினார். ஆங்கில அறிவு, உலகியல் அறிவு, சொல்வன்மை, வீரம் இவற்றால் சிறந்தவர் கோட்டைச்சாமித் தேவர். சீமைச்சாமித் தேவர் சிறந்த இசைப்புலமை உடையவர். கடைசிப் பிள்ளையாகிய பாண்டித்துரைத் தேவர் ஈகையிலும் கலைகளிலும் இணையற்று விளங்கினார். இம்மூவரும் இளம்பருவத்தினராய் இருக்கும் பொழுதே பொன்னுச்சாமித் தேவர் விண்ணுலகு அடைந்தார். அக்காலத்தில் சேது சமஸ்தான ஆட்சியாளராக சேஷாத்திரி ஐயங்கார் என்பவர் இருந்தார்.