பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

தமிழ் காத்த தலைவர்கள்

பொதுப்பாடல்களைத் தொகுத்தும் வகுத்தும் 'சைவ மஞ்சரி' என்னும் பெயரால் ஒரு நூலை வெளியிட்டார். தமிழறிஞர் சாமிநாதையரைப் பலகால் தமது அரண்மனைக்கு வரவழைத்துச் சிறப்புக்கள் செய்தார். அவரிடம் பெரும்பொருளை உதவிப் புறப்பொருள் வெண்பாமாலை, மணிமேகலை, திருவிளையாடற் புராணம் போன்ற நூல்களை வெளியிடுமாறு செய்தார். மதுரை வித்துவான் இராமசாமிப் பிள்ளைக்குப் பொருள் உதவி புரிந்து, சிவப்பிரகாசர் நூல்களை வெளியிடச் செய்தார். இங்ஙனம் தமிழ் நூல்களை நாடெங்கும் பரவுமாறு செய்து தமிழைக் காத்த தலைவரானார்.

மதுரையில் தமிழ் நிலை

தேவருக்கு மதுரையில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரப் பெருமானிடம் மிகுந்த பத்தியுண்டு. அதனால் அடிக்கடி மதுரை மாநகருக்கு வந்து அப்பெருமானை வழிபட்டுச் செல்லுவார். அவர் தம்முடைய மாளிகைக்குச் 'சோமசுந்தர விலாசம்’ என்றும் பெயர் வழங்கினார். ஒரு சமயம் அவர் மதுரைக்கு வந்திருந்த பொழுது அவரைச் சொற்பொழிவு ஆற்றுமாறு அறிஞர் பலர் வேண்டினர். அவரும் அதற்கு இசைந்தார். தமிழுக்குக் கதியென விளங்கும்