பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

129

சமாஜத்தின் முப்பத்தாறாம் ஆண்டு விழாவினைத் திரிசிரபுரத்தில் நடத்துவதென அன்பர்கள் முடிவு செய்தனர். திருக்கோவலூரில் தங்கியிருந்த சுவாமிகளைத் தலைமை யேற்குமாறு வற்புறுத்தி வேண்டினர். ‘அன்பர் பணியே இறைவன் பணி' அதுவே இன்பப் பணி எனவே தம்வாழ்வில் ஏற்றிருந்த சுவாமிகளும் திருவுள்ளக் கருத்து இசைவினைத் தெரிவித்தார்கள். சிலநாள் முன்னதாகவே செல்லும் இயல்பு கொண்டவர்களாதலால் அங்ஙனமே வழிக்கொண்டார்கள். பெண்ணாகடத்தில் அன்பர்கள் வேண்டிக் கொள்ளச் சொன்மாரி பொழிந்தார்கள். திரிசிரபுரம் சென்றடைந்தபோது அன்பர் பலர் எதிர்கொண்டழைத்தனர். அவருள் குறிப்பிடத் தக்கவர்கள். திருச்சி நாஷனல் கல்லூரியில் தமிழ்ப் பணி புரிந்து கொண்டிருந்த திரு. ப. கந்தசாமி அய்யர் (பின் ஆறாம் பட்டத்தில் எழுந்தருளியிருந்தவர்கள்), டி. எம். நாராயண சாமிப் பிள்ளையவர்கள், க. அரங்கசாமி முதலியாரவர்கள், அ. நடேச முதலியாரவர்கள் முதலியோார்.

1941 டிசம்பர் 25-ஆம் நாள் தொடங்கி, மூன்று நாட்கள் திரிசிரபுர ஆண்டு விழா செவ்வனே நடைபெற்றது.

அதுவே சுவாமிகள் சமாசத்திற்குச் செய்த பணிகளுள் இறுதிப் பணியாம்.

பற்பல இடங்களில் கிளைக் கழகங்களை நிறுவச் செய்து அவை தாய்ச் சங்கத்தோடு தொடர்புகொண்டு பற்பல பணிகளையும் மேற்கொள்ளுமாறு தூண்டினார்கள்.

செயலாளராக அமர்ந்து பற்பலவிதங்களிலும் சமாசம் அரும் பணிகளையாற்ற வழி வகுத்தவர்களான திரு. ம. பால சுப்பிரமணிய முதலியார் B.A., B.L., அவர்களைச் சமாசம் ஒரு நாளும் மறக்க இயலாது. அவர்களுக்குப் பல விதங்களிலும் ஆலோசனைகளைச் சுவாமிகள் அருளிச் செய்ய, அவர்களும் சிறந்த பணிகளை மேற்கொண்டு சமாச வளர்ச்சிக்கும் அதன் வாயிலாகத் தமிழ்நாட்டில் சைவ நன்னெறிக்கும் அருந்தொண்டு புரிந்தார்கள்.

சமாசச் செயலாளராகச் சிலகாலம் தொண்டுபுரிந்தவரே யெனினும் குறிப்பிடத்தக்க பல வழிகளை வகுத்து உதவியவர், திரு. கா. இராமநாதன் செட்டியாரவர்கள், அவர் ராஜாசர். அண்ணாமலைச் செட்டியாரவர்களுடன் அயல் நாடுகளும் சென்று மீண்டவர், அவரும் சமாசத்தின் ஒரு தூணாக விளங்கியவர்.