58
தாய்மொழி காப்போம்
39. கற்றோரை வேண்டுகிறேன்
அறிவியல் கற்று வந்தீர்
அளவிலா உவகை கொண்டேன்;
பொறியியல் தேர்ந்து வந்தீர்
பூரித்து மகிழ்வு பெற்றேன்;
பொருளியல் துறையில் தேர்ந்தீர்
புகழ்ந்தனர் அயல்நாட் டாரும்;
இருளினில் மூழ்கி நின்ற
இனத்திலோர் ஒளியைக் கண்டேன்.
மருத்துவத் துறையுங் கற்றீர்
மருந்தியல் நெறியும் பெற்றீர்
பெருத்தநும் அறிவால் நாட்டில்
பெரும்புகழ் குவித்தீர் மேலும்
[1]அருத்தியால் உம்மை வேண்டி
அழைத்தனர் வெளிநாட் டாரும்;
கருத்தினுள் எழுச்சி கொண்டேன்
காய்நிலஞ் செழித்த தென்றே!
உயிரியல் தோய்ந்து கற்றீர்
உடலியல் ஆய்ந்து கற்றீர்
பயிரியல் செழிக்கக் கற்றீர்
பலவகை நிலநூல் என்னும்
[2]அயிரியல் அதுவும் கற்றீர்
ஆதலின் உலகம் போற்றும்
பயன்பல விளையும் என்றே
பகலெலாம் கனவு கண்டேன்
வேதியல் என்று கூறும்
வியத்தகு நூலுங் கற்றீர்
ஓதிய பூதம் ஐந்தை
உணர்த்திடும் இயல்கள் கற்றீர்
மூதுணர் வுடையார் சொன்ன
மொழியியல் பலவுங் கற்றீர்
ஆதலின் நிமிர்ந்து நின்றேன்
அருந்தமிழ் தழைக்கு மென்றே.