பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

345


"என்னால் இன்னும் உழைக்க முடியும்... ஆனால்., என்னால் உழைக்க முடியாது போனால்-அப்புறம் நான் உயிர் வாழ்வதில் எந்த அர்த்தமும் கிடையாது-உயிர் வாழ்வது முட்டாள்தனம்.....”

தாய் பெருமூச்செறிந்தாள்: தன்னையும் அறியாமல் அந்திரேயினுடைய பிரியமான வாசகத்தை நினைத்துப் பார்த்தாள்: “இதெல்லாம் உண்மைதான். ஆனால் இது மட்டும் ஆறுதல் தராது.” அன்று முழுவதுமே அவளுக்கு ஓயாத ஓழியாத வேலை. எனவே அவள் களைத்துப் போயிருந்தாள்: மேலும் அவளுக்கு ஒரே பசி. அந்த நோயாளியின் கரகரத்த முனகல் பேச்சு அந்த அறை முழுதும் நிரம்பி, அறையின் சுவர்களைத் தொட்டுத் தடவி ஊர்ந்து சென்றது. ஜன்னலுக்கு வெளியே தெரியும் மரத்தின் கிளைகள் கறுத்துத் திரண்டு பயங்கரமாகக் கவிந்து சூழ்ந்த கார்மேகங்களைப் போல் தோன்றி தம்முடைய கருமையால் வியப்பூட்டின. அந்தியின் அசைவின்மையில், சோகமயமாய், இருளை எதிர்நோக்கி எல்லாமே விசித்திரமாக அமைதியடைந்தன.

“எனக்கு எவ்வளவு மோசமாயிருக்கிறது” என்று கூறி விட்டுக் கண்களை மூடி மௌனத்தில் ஆழ்ந்தான் இகோர்.

“தூங்கு. தூங்கினால் கொஞ்சம் சுகமாயிருக்கும்” என்று போதித்தாள் தாய்.

அவனது சுவாசத்தை பரிசீலனை செய்து பார்த்துவிட்டு அவள் சுற்றுமுற்றும் பார்த்தாள்; சோகத்தின் விறைப்பான பிடிப்பிலே சிக்கி, சிறிது நேரம் அப்படியே அசையாது உட்கார்ந்திருந்தாள். பிறகு அரைத் தூக்கத்தில் ஆழந்தாள்.

வாசல் நடையில்கேட்ட ஏதோ ஒரு சத்தத்தில் அவள் விழித்தெழுந்தாள். விழித்தவுடன் துள்ளியெழுந்து இகோரைப் பார்த்தாள். அவளது கண்கள் விழித்திருப்பதைக் கண்டாள்.

“நான் தூங்கிப்போய்விட்டேன். என்னை மன்னித்துவிடு” என்று மெதுவாகக் கூறினாள் அவள்.

“மன்னிக்கப்படவேண்டியது நான்தான்” என்று அவன் மெதுவாகச் கூறினாள்.

இரவு நேரத்தின் இருள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தது. அந்த தரை சில்லிட்டுக் குளிர்ந்தது. ஏதோ ஒரு விபரீதமான இருள் எல்லாவற்றின் மீதும் படர்ந்து கவிந்திருந்தது; நோயாளியின் முகமும் இருண்டு போயிருந்தது.

ஏதோ கரகரப்புக் கேட்டது. தொடர்ந்து லுத்மீலாவின் குரலும் வந்தது.