பக்கம்:திருக்குறள், மூலம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

ஒரு புதிய முயற்சி; தனித்தனிக் குறளுக்கு நேர் உரை தராமல் தனித்தனித் தலைப்புகளில் உள்ள செய்திகள் தொகுத்துத் தரத் ‘திருக்குறள் செய்திகள்’ என்னும் நூலை வெளியிட்டுள்ளோம்.

ஒட்டு மொத்தமாக உரைநடையில் திருக்குறள் கருத்துகளை அறிவிக்க எடுத்துக்கொண்ட முயற்சி இது.

செய்திகள் உள்ளத்தில் பதியுமாறு இன்றைய நடைமுறையோடு ஒட்டி விளக்கப்படுகின்றன. இது ஓர் உரைநடைக் காவியமாக அமைந்துள்ளது.

இதன் தமிழ்நடை தனக்கு என ஒரு முத்திரை கொண்டது; எதுகை மோனை நயம் அமைந்த கவிதை நடை இதன் தனிச்சிறப்பு உரைநடையில் இது ஒரு புதிய சாதனை.

வள்ளுவர் பாக்களுக்குப் புதிய உரைநடை வடிவம் தரப்பட்டுள்ளது. மொத்தத்தில் இது ஒரு தமிழ்க் காவியம்; திருக்குறளை ஒரு காவியமாக்கித் தரப்பட்டுள்ளது.

அறத்துப்பாலில் தக்க விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. பொருட்பாலில் இன்றைய அரசியல் சமுதாய நல்லுறவுகள் வினை செயல்வகை முதலியன தெளிவாகத் தரப்பட்டுள்ளன. இன்பத்துப்பால் ஒரு அகப்பொருள் நூலாகும். அதனை உரைநடைக் காவியமாக்கித் தருகிறது.

கருத்து விளக்கத்துக்குத் திருக்குறள் செய்திகள்; வள்ளுவர் பாக்களை அறிய இம்மூல நூல் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டும் சேர்த்து வாங்குவது பயன் உடையது ஆகும்.

ரா. சீனிவாசன்