பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் - அங்கவியல் 160

நால்வகை உறுப்புக்களாலும் முறையாக அமைந்து, களத்திற்படும் துன்பங்கட்கு அஞ்சாமல் பகைவரை வெல்லும் படையே, செல்வங்களுள் சிறந்த செல்வம். 761 போரில் நேரிட்ட அழிவுக்கு அஞ்சாமல் பகைவர்மேற் செல்லும் ஆண்மை, வழிவழிப் புகழோடு விளங்கும் தொல்படைக்கே இயல்வதாகும். 762 பகைப்படைகள் எலிகளைப்போலக் கடலாகத் திரண்டு வந்து ஆரவாரித்தாலும், சிறிய தொல்படை நாகத்தைப் போல மூச்சுவிட்டதும், அது முற்றவும் அழிந்துபோம். 763 மனத்தின் உறுதியிலே அழிவற்றதாய், பகைவரது வஞ்சனைகளுக்கு உட்படாததாய், வழிவழித் தொடர்ந்துவந்த வன்கண்மை உடையதாய் விளங்குவதே, சிறந்த படை 764 கூற்றம் சினங்கொண்டு தன்மேல் எதிர்த்து வந்தாலும், அதனோடும் சென்று பொருந்தி, எதிர்த்துப் போரிட்டு வெல்லும் ஆற்றல் உடையதே, சிறந்த படை ஆகும். 765

மறப்பண்பும், மானவுணர்வும், நன்னெறியே பற்றிச் செல்லுதலும், மன்னனால் தெளியப்பட்ட சிறப்பும் என்னும் நான்கும், படைக்குச் சிறந்த பாதுகாப்பு ஆகும். 766 மேல்வந்த போரைத் தாங்கிநின்று, பகைவரை மேற்சென்று வெல்லும் வகைகளை ஆராய்ந்து, அவர்களின் தூசிப்படையைத் தாக்கி அழித்து மேற்செல்வதே, படை ஆகும். 767 போரிடுகின்ற தறுகண்மையும், அதற்கு வேண்டிய ஆற்றலும் இல்லாதிருந்தாலும், ஒருபடை தனது அணிவகுப்பினாலேயே பகைவரை வெற்றி அடைந்துவிடும். 768 தேய்ந்து சிறுகுதலும், மனம்நீங்காத வெறுப்பும், பொருளில்லாத வறுமையும் இல்லாமலிருந்தால், அந்தப் படை தவறாமல் எந்தப் பகையையும் வெற்றி கொள்ளும்! 769 நிலையான மறவர்களை மிகுதியாக உடையதானாலும், ஒரு படையானது, தன் தலைவர்கள் திறமையில்லாதவர்களாக இருந்தால், பயனற்று அழிந்துவிடும். 770