பக்கம்:திருக்குறள் உரை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




பொதுமறை திருக்குறள்

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

மனித குலத்தின் மேம்பாடு அறிவின் வழிப்பட்டது; ஆள்வினையின் வழியது. மனிதகுலத்தின் அமைதி, நீதியைச் சார்ந்தது. மனிதகுலத்தின் உயிர்ப்பு, விழுமிய கடவுள் நெறி. இத்தகு உயர்நெறியில் மனிதகுலத்தை உய்த்துச் செலுத்தக்கூடிய ஒரு நூல் தேவை. அந்த நூல் எதுவாக இருக்கக் கூடும்?

நூல்கள் காடுகள் போல் பல்கி உள்ளன. அவற்றுள் பல, நூலின் இலக்கணத்திற்கு மாறுபட்டவை. நூல்கள் மனக்கோட்டத்தைத் தவிர்க்க வேண்டியவை. ஆனால் இந்த நூல்களில் பெரும்பாலான நூல்கள் மனக்கோட்டத்தை உண்டாக்குவனவாக அமைந்துள்ளன. இலக்கியக் காட்டில் ஒரே ஒரு நூல் உயர்ந்து விளங்குகின்றது. சர் ஆல்பர்ட் சுவைட்சர், சிந்தைக்கினிய செவிக்கினிய வார்த்தைகளால் அந்த நூலைப் பாராட்டுகிறார். “உயர்ந்த நீதி இலக்கியங்களில் திருக்குறளே சிறந்தது. மனிதராகப் பிறந்தோர் பேசும் வேறு எம்மொழியிலும் திருக்குறளை ஒப்ப ஒரு நூல் இல்லை" என்று பாராட்டியுள்ளார். திருவள்ளுவர் தந்த திருக்குறளுக்கு என்ன சிறப்பு?

திருக்குறள் ஒரு முழுநூல்; வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளையும் தழுவி வளர்க்கும் வாழ்க்கைநூல்; அறநூல்; அரசியல் சாத்திரநூல்; அரசியல் உண்மைகளைச் சதுரப்பாட்டுடன் காட்டும் பெருநூல்; மெய்யுணர்வினை நல்கும் ஞானநூல்; மனித வளர்ச்சியின் பருவம்தோறும் துணை நின்று வழிநடத்தும் வாழ்வுநூல்; உலகப் பொது நூல்.

திருக்குறள் கடவுளை நம்புகிறது. ஆனால் கடவுளுக்காகச் செய்யப்பட்ட நூலன்று; மதச்சார்பான நூலன்று. திருக்குறள் அரசனை நம்புகிறது. ஆனால், அரசனுக்காகச் செய்யப்பட்ட நூலன்று. திருக்குறள் ஓர் அரசியல் நூலே. மக்களின்