பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

உதாரணமாக,

        "கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
         மெய்வேல் பறியா நகும்."

என்ற குறளில் வரும் “நகும்” என்ற சொல்லுக்கு ஆசிரியர் தரும் விளக்கவுரை தனிச் சிறப்பு வாய்ந்தது. “அது வெற்றிச் சிரிப்பா? ஏளனச் சிரிப்பா? மனக்குறைச் சிரிப்பா? துன்பச் சிரிப்பா? அல்லது பயங்கரச் சிரிப்பா?” என்று பல கேள்விகள் கேட்டு, கேள்விகளுக்கு ஆசிரியர் கூறும் விடைகள் மிகச் சுவையுடையவை. இப்பேர்ப்பட்ட உத்திகளைக் கையாண்ட காரணத்தால் கி. ஆ. பெ.யின் தமிழ் இயல்பாகவும் உயிர்த்துடிப்போடும் பேசுகிறது.

வள்ளுவருடைய ஆழங்காண முடியாத இதயத்திலிருந்து தோண்டித் தோண்டியெடுத்த உண்மைகளை விளக்கும் இந்நூலுக்கு, “திருக்குறள் புதைபொருள்” என்ற தலைப்பு முற்றிலும் பொருத்தமானது.

ஆழ்ந்த அறிவும், கலைப்பாங்கும், நகைச்சுவையும் விரவிக் கலந்த இந்நூலைப் படித்து, வியப்பும், விம்மிதமும் அடைந்தேன். ஆசிரியர் இன்னும் பல்லாண்டு இப் புதைபொருள் ஆராய்ச்சியை நடத்தி, அதன் பலனைத் தமிழர்களுக்கு நல்குவாராக.

சென்னை

ஜஸ்டிஸ் எஸ். மகராஜன்

2-11-74