பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௨௯


 கொள்ளலாம்! இம் மேற்குறித்துக் காட்டப் பெற்றுள்ள பதினைந்து உரைகளின் அமைப்பு முறைக்கும் - இவ்வுரையமைப்பாக்கத்திற்கும் எவ்வளவு வேறுபாடு உள்ளது என்பதை மேனோட்டமாகப் (மேல் நோட்டமாக பார்க்கினுங் கூட எவரும் விளங்கிக் கொள்ளுவர்![அடைப்புக் குறிக்குள் அடங்கித் தோன்றும் ["இவ்வுலகில்"] என்னும் வெளிப்பாடு, கருத்தை எல்லை அடைவு செய்து தெளிவிக்கும் வகையில் முன்னிருத்திவைத்த அவாய் நிலையினது!]

தம் மக்கள் (63) : (ஐயா அவர்களின் உரைவிளக்கத்துள் ஒரு சிறு கூறு:) எம் மக்கள், எம் மகன், எம் மகள் என்று உரிமைகொண்டாடுவதற்கு உரிய பொருளாக இவ்வுலகில் ஒருவர்க்கு இருப்பது, அவர் பிள்ளைகளே! இஃது, தாய் தந்தை இருவர்க்குமே பொது என்பதால் "தம்” என்றார்! -

உரைச் சுருக்கத்தின் விளக்கக் குறிப்பின் உள்ளீட்டிலும் இத்தகு நுண்ணுட்பங்களெல்லாம் துணுக்கி நுணுக்கி நுவலப் பெற்றுள்ளன! தம்தம் அறிவின் ஆழவகலங்களுக்கேற்ப அங்கங்கும் அறிவர் சுவைத்துத் துய்க்கலாகும்படி திட்பமாக இவ்வுரைச்சுருக்கம் அருக்கமான (abridgement) ஆக்கமாகி நிற்கின்றது!

திருவள்ளுவர் காலச்சூழலை - அக்கால வரலாற்றுப் பின்னணியை நன்கு விளங்கிக்கொண்டு உரைவரைந்துள்ள முறை, இவ்வுரைப் பெருமைக்குரிய தலைமைச் சிறப்புக் கூறுடையது!

"தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
 பெய்யெனப் பெய்யும் மழை" (55)

- என்னும் குறட்பாவுக்கு மணக்குடவர், பரிதி, பரிப்பெருமாள், காளிங்கர், பரிமேலழகர், மல்லர் முதலிய முற்கால உரையாசிரியர்களிற் பலரும் - முன்மைக்கும் அண்மைக்கும் இடைமையராயிருந்து பரிமேலழகருரைக்கு உரைவரைந்தவர்களாகிய காரிரத்னக்கவிராயர், கவிராசபண்டிதர் ஆகியோரும், கா.சு, திரு.வி.க நாகை.சொ. தண்டபாணியார், வ.உ.சி, முதலிய அண்மைக்கால உரையாசிரியர்களில் மிகப்பெரும்பாலரும், "கணவனைத் தொழுதெழும் கற்புடையாட்டி பெய் என்று சொன்னவுடன் மழையானது கட்டாயமாகப் பெய்யும் என்னும் பொருட்படுமாறு வகையுரைகள் வரைந்து வெளிப்படுத்தியுள்ளனர். வ. சுப. ப. மாணிக்கனார் "மழை பெய்யுமே” என்றவாறு ஏகாரம் புணர்த்தித் தெளிவுபடவும்