23. மாரி மலைமுழைஞ்சில்
மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணா உன்
கோயில்நின் றிங்ஙனே போந்தருளிக்
கோப்புடைய சீரிய சிங்காசனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.
திருவாய்ப்பாடிப் பெண்கள் கண்ணனைப் புகழ்ந்தும், அவனுடைய வீர தீரச் செயல்களை விளக்கமாக எடுத்துரைத்தும் அவனுடைய மனைவியாகிய நப்பின்னையை நயந்து வேண்டிக் கொண்டும் இவ்வாறு பலவாறாகவும் கண்ணனைத் துயிலிலிருந்து எழுப்பப் பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொண்டார்கள். இப்பொழுது அவனைத் துயில் உணர்த்துவதன் காரணத்தை விண்டுரைப்பதாக இப்பாசுரம் அமைந்துள்ளது.
நல்ல மழைக்காலம்; ஆண்மையுள்ள சிங்கமொன்று மலைக்குகையில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தச் சிறப்புடைய சிங்கமானது உறக்கம் தெளிந்து தீப்பொறி பறக்கும் தன் கண்களை விழித்துப் பிடரி மயிர்கள் பொங்கும்படி எல்லாப் பக்கமும் திரும்பிப் பார்த்து, சோம்பல் முறித்துத் தன் பெருமை தோன்ற நிமிர்ந்து, அக்குகையினின்றும் வெளிப்பட்டு, கம்பீரத்தோடு நடந்து வருகிறது என்று, சிங்கமொன்று தான் வாழும் குகையிலிருந்து தூக்கத்தினின்று விழித்து எழுந்து வருவதனை - எழுந்து வரும் காட்சியினைக் கோதை நாச்சியார் தாம் அருகிலிருந்து பார்த்தது போல அப்படியே வருணித்துள்ளார். தி.