48
இனியன் தன் வகுப்புத் தோழனாயிருந்தும் மணி ஒருமுறைகூட அவன் வீட்டுக்கு வந்ததில்லை. வர விரும்பியதும் இல்லை. இன்று கட்டுரை ரகசியம் தெரிந்துவர தன் நண்பர்களுக்காக வலுக்கட்டாயமாக வரவேண்டியதாகி விட்டது. இனியனின் பேச்சும் செயலும் மணிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இருவரும் பேசிக் கொண்டே வீட்டை நெருங்கினார்கள். இனியன் வீடு கூரை வீடாக இருந்தாலும் விசாலமாக இருந்தது.
“இனியன்! உங்க வீடு கூரை வீடாக இருந்தாலும் ரொம்பச் சுத்தமாகவும் அழகாகவும் இருக்குடா. நீ படிக்கிற அறை எது'டா?”
“இதோ: இந்தச் சின்ன அறைதான்’டா நான் படிக்கிற அறை.”
மணியைத் தன் படிப்பறைக்குள் அழைத்துச் சென்று காட்டினான் இனியன். மணி அந்த அறை முழுதும் தன் பார்வையை ஓட்டினான்.
“சின்ன அறையாக இருந்தாலும் ஆடம்பரம் இல்லாம அமைதியான இடமா இருக்குடா. ஒரு சின்ன நூலகம்கூட வச்சிருக்கியே. எல்லாப் புத்தகமும் உங்கப்பா வாங்கிக் கொடுத்ததாடா?”