பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


இந்த அடிப்படையை மனத்துள்கொண்டே பெளத்தர்கள் நிகழ்காலம் என்ற ஒன்றை மறுத்து, இறந்த காலம், எதிர்காலம் என்ற இரண்டை மட்டுமே கொண்டனர்.

அடிகளார் 'முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே' என்று கூறியது சிந்திக்கத் தக்கது. பொதுவாகப் பொருள் என்று கூறினால், அது திண்மையும் வடிவும் உடையதாக இருத்தல் வேண்டும். இவை இரண்டும் இல்லாத காற்றை, ஒரோவழிப் பொருள் என்று கூறினார்களேனும், அதனைப் பொருள் என்று கூறும் மரபு இல்லை. ஆனால், அடிகளார் விஞ்ஞானி ஆதலால் காற்றையும், காலி இடத்தையும் (empty space) பொருள் என்றே கொள்கிறார்.

பல கோடி ஆண்டுகளின் முன்னர்த் தோன்றிய பிரபஞ்சம், இந்த உண்டைகளின் நடுவே உள்ள காலி இடம் என்பவை என்று தோன்றின என்று கூறும் ஆற்றல் இற்றை நாள் விஞ்ஞானத்திற்கு இல்லை. ஆனாலும், இந்தப் பிரபஞ்சத்திற்குத் தோற்றம் உண்டு என்றே மெய்ஞ்ஞானிகளும் விஞ்ஞானிகளும் கூறியுள்ளனர். எந்த ஒன்றும் தோன்றிற்று என்றால், அது மறைந்தே தீரவேண்டிய கடப்பாடுடையது.

அடிகளார் முன்னைப் பழம் பொருள் என்று குறிப்பிட்டது முக்கூட்டுப் பரிமாணம் உடைய இந்த அண்டத்தையே ஆகும். ஒரு கர்த்தாவால் அண்டம் படைக்கப்பட்டது என்றால், படைக்கப்பட்ட பொருளைக் காட்டிலும் படைத்தவன் முற்பட்டவனாக (பழமையானவனாக) இருத்தல் உறுதி.

இந்தப் பழம் பொருள்கள் அனைத்தும் என்றோ ஒரு காலத்தில் படைக்கப்பட்டவை என்றால், அதற்கு முன்னர் என்ன இருந்திருக்கும் என்ற வினாத் தோன்றுமன்றோ?