பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை $ 391 இதனை ஏற்றுக்கொண்டாற்கூட ஒரு பிரச்சினை தொன்றுதொட்டே எல்லா நாடுகளிலும், இருந்துவருதலைக் காணலாம். அதுவே பல பெண்கள் தொடர்பாகும். பணம், பதவி என்ற இரண்டும் இருந்துவிட்டால் கேட்கவே வேண்டியதில்லை. பாலுணர்ச்சியின் வெளிப்பாடாகிய இதனைக் களைவது கடினமாகும். இறையருள் என்ற ஒன்று இருந்தாலொழிய இதனை வென்று மீள்வது ஏறத்தாழ இயலாத காரியம். மூவர் தேவாரங்களில் மகளிர் தொடர்பினால் ஏற்பட்ட குறைபாடு அதிகம் பேசப்பெறவில்லை. காரணம், மூவருள் இருவர் மேட்டுக்குடி மக்களாக இருந்ததாகத் தெரியவில்லை. இந்த மூவருள் நாவரசர்மட்டுமே மேட்டுக்குடியைச் சேர்ந்தவராகவும் பெரும்பொருள் படைத்தவராக இருந்ததாகவும் பெரிய புராணம் பேசுகிறது. பெருஞ்செல்வத்தோடு வாழத் தொடங்கிய நாவரசருக்குத் தாய் தந்தையர் கட்டுப்பாடும் மிக இளமையிலேயே போய்விட்டது. இந்த நிலையில் அவர் தூய்மையாக வாழ்ந்தார் என்பது குறிப்பிடவேண்டிய சிறப்பாகும். இளமைக் காலத்தில் புறத்துறவைப் பெரிதுபடுத்தும் சமண சமயத்தில் இருந்துவிட்டார். ஆதலின், மகளிர் தொடர்புபற்றிய பிரச்சினை அவர் வாழ்க்கையில் எழவில்லை. சமணத்திலிருந்து மீண்டவுடன் இறையருளைப் பெற்றுவிட்டார் ஆதலின் பாலுணர்வினால் எந்த விளைவும் ஏற்படவில்லை. அடிகளாரைப் பொறுத்தமட்டில் மேட்டுக்குடிகளில் ஒன்றாகிய ஆமாத்திய குலத்தில் பிறப்பு, பெருங்கல்வி பெற்ற சிறப்பு, அதனைத் தொடர்ந்துவந்த பதவிச் சிறப்பு ஆகிய அனைத்தும் இளமையிலேயே இருந்துவிட்டமையின் மகளிர்தொடர்பு சற்று அதிகமாகவே இருந்திருக்க வாய்ப்பு உண்டு. அதில் அவ்வளவு ஈடுபட்டிருந்த ஒருவர் திடீரென்று ஒரே நாளில் மணிவாசகராக மாறியது ஓர் அற்புதம்,