திரு. வி. க. 63
“இயற்கையைப் போற்றுவதும், இயற்கை இறையைப் போற்றுவதும் ஒன்றே. சில அறிஞர் இறையை இயற்கை என்றே போற்றுவர்; சிலர் இயற்கை வடிவமான இறை என்று போற்றுவர். அப்போற்று தலும் இப்போற்றுதலும் சென்று சேருமிடம் ஒன்றே. ஆகவே, இயற்கையைப் போற்றுவோர் யாவரும் இறைவனைப் போற்றுவோரேயாவார். இது பற்றிப் பொதுவாக எனது நூல் பலவற்றிலும், சிறப்பாகச் ‘சன்மார்க்க போதமும் திறவும் என்னும் நூலிலும் விளக்கியுள்ளேன்.
எல்லாவற்றிற்கும் பிறப்பிடமாய், எங்குமிருப்ப தாய் உள்ள வித்தை உணர்ந்த ஆழ்வார்- எங்குமுள்ள அவ்வித்தை எட்டு மூர்த்தமாக உலகுக்கு உரைத்தருளிய நம்மாழ்வார்-இறை வடிவம் இயற்கை’ என்பதைப் பலபடப் பாடிப்பாடி, இயற்கையின் மாண்பை இனிது விளக்கினார். ஆழ்வார் இயற்கையில் தோய்ந்து, இறையில் திளைத்து, இறை இன்பம் கொழிக்க இயற்கைப் பாக்களைத் தமிழில் பொழிந்தார். அவர் பாக்களில் எங்கும் இயற்கை; எங்கும் இறை எங்கும் இயற்கை இறை.
ஆழ்வார் அருளிய இயற்கைப் பாக்களை நோக்குவோம்; அவற்றில் பூக்கள் மலர்கின்றன; ஞாயிறு வெயில் வீசுகிறது; திங்கள் அமுதம் பொழிகிறது; சோலை மணங் கமழ்கிறது; மலைகள் நிற்கின்றன; மேகங்கள் தவ்ழ்கின்றன. பறவைகள் பறக்கின்றன; ஆநிரைகள் மேய்கின்றன; ஆயர்கள் ஆடுகிறார்கள்; குழலோசை கேட்கிறது; உயிர்கள் உலாவுகின்றன; உலகம் புலனாகிறது. இஃதென்ன அருமை! ஒருவர் பாக்களில் இவ்வளவு பொருள்!