பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

இவை நான்கும் மராட்டிய மன்னர் சாம்போசி காலத்தில் அளிக்கப் பெற்றவை. இவற்றுள் முதல் மூன்று செப்பேடுகளிலும் முதற்பதியில் வடமொழியும், பிற்பகுதியில், தமிழ்ப்பாடலும் வரையப் பெற்றுள்ளன. 48 ஆம் எண்ணுள்ள செப்பேடு முழுவதும் வடமொழியில் வரையப் பெற்றதாகும்.

மேற்குறித்த செப்பேடுகளுள் 47-ஆம் செப்பேடு கி. பி 1684-இல் அளிக்கப் பெற்றதாகும். இதன் முதற்கண் உள்ள வடமொழிப் பகுதி தில்லைக் கூத்தப்பெருமானது திருவருட் பெருமையினைக் கூறி மராட்டிய மன்னனுடைய குலகுருவாகிய முத்தைய தீட்சிதரால் சிதம்பரம் நடராசர் கோயில் குட முழுக்குச் செய்யப்பெற்ற செய்தியினைக் கூறுகின்றது. சேர நாட்டைச் சேர்ந்த சிற்பி இச்செப்பேட்டை அளித்ததாக இதன் வடமொழிப் பகுதியிற் கூறப்பெற்றுள்ள குறிப்பு ஆழ்ந்து சிந்தித்தற்குரியதாகும். இதன் கண்

'இயல்வாம சகாத்தம் ஆயிரமோடறு நூற்றாறின்
இனிய ரத்தாட்சி வருடம்
இலகு கார்த்திகை மாதம் இருபத்திரண்டாந்
தேதி சுக்கிர வாரமும்
செயமான தசமியும் அத்தநட்சேத்திரமும்
திகழ் கும்ப லெக்கினமுமே
திருந்து பவ கரணமும் ஆயிஷ்யமான யோகமும்
தினமும் வந்தே சிறப்ப
உயர் ஆகமப் படியின் ஆனந்த நடராசர்
ஒளி பெற நிருத்த மிடவே
ஓங்கு சிற்சபை தனைச் செம்பினால் மேய்ந்திடும்
உண்மையை யுரைக்க வெளிதோ
வயலாரும் வரவிசூழ் புலிசையழகிய திருச்
சிற்றம்பலத் தவமுனி
வையகம் துதி செயக் கும்பஅபிஷேகமும்
மகிழுற முடித்த நாளே'

எனவரும் தமிழ்ப்பாடல் வரையப் பெற்றுள்ளது. சாலிவாகன சகம் 1606 ஆம் ஆண்டு (கி. பி. 1684) - இரத்தாட்சி வருடம் கார்த்திகை மாதம் இருபத்திரண்டாந்தேதி வெள்ளிக்கிழமை

' .