உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83


15. பழைய காலத்திய இருபெருங்
கிணறுகள்

1. மாற்பிடுகு இருபெருங் கிணறுகள்

மாற்பிடுகு பெருங்கிணறு என்பது திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே பன்னிரண்டு மைல் தூரத்திலுள்ள திருவெள்ளறைப் புண்டரீகாட்சப் பெருமாள் கோயிலின் தென்பக்கத்திலுள்ளது. இங்குக் குறிக்கப் பெற்ற திருமால் கோயில் ஆழ்வார்களால் பாடப்பெற்றதாகும். அன்றியும், இவ்வூரில் சிவாலயம் ஒன்று உளது. இது மலையிற் குடைந்ததொரு கோயில் என்பது பார்ப்போர்க்கு இனிது புலப்படும். தற்காலத்தில் இத்திருக் கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமானைச் சம்புநாதர் என்று வழங்குகின்றனர்; ஆனால் இதிற் காணப்படும் கல்வெட்டுக்கள் திருவானைக்கல் பெருமான் அடிகள் என்றே உணர்த்துகின்றன. இவ்விருகோயில்களிலும் சோழ மன்னர்களது கல்வெட்டுக்கள் பல உள்ளன. அவற்றுள் இரண்டு கல்வெட்டுக்கள் ஒரு கிணற்றின் மேற் பக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஒன்று, கிணற்றை வெட்டுவித்தவன் யாவன் என்பதையும் அதற்கு இடப்பெற்ற பெயர் யாது என்பதையும் கிணறு வெட்டப் பெற்ற காலத்தையும் அறிவிக்கின்றது. மற்றொரு கல்வெட்டு அறுசீர் விருத்தமாக உள்ளது. கல்வெட்டுக்கள் இரண்டையும் அடியிற் காண்க :

1. (1) ஸ்வஸ்திஸ்ரீ பாரத்வாஜகோத்திரத்தின் வழித் தோன்றிய பல்லவ திலத குலோத்பவன் தந்திவர்மற்கு யாண்டு நான்காவதெடுத்துக் கொண்டு ஐந்தாவது முற்றுவித்தான் ஆலம் பாக்க விசைய நல்லூழான் (2) தம்பி கம்பன் அரையன் திருவெள்ளறைத் தென்னூர்ப் பெருங்கிணறு இதன் பெயர் மாற்பிடுகு பெருங்கிணறென்பது - இது ரட்சிப்பார் இவ்வூர் மூவாயிரத்தெழுநூற்றுவரும் :