உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

115


எனவே, செருவிலிபுத்தூருக்கு அழகார் திருப்புத்தூர் என்ற பெயரும் உண்டு போலும். ஆனால் செருவிலிபுத்தூர் என்ற பெயருடைய ஊர் இந்நாளில் யாண்டும் காணப்படவில்லை. நாயன்மார்கள் அவதரித்தருளிய திருப்பதிகளை யாவரும் அறிந்து கொள்ளுமாறு மிகத் தெளிவாகக் கூறிச்செல்வது, சேக்கிழாரடிகள்பால் காணப்படுந் தனிச் சிறப்புக்களுள் ஒன்றாகும். இவ்வுண்மையை, ஆனாய நாயனாரது திருப்பதி மேல்மழநாட்டில் மங்கலம் எனவும், திருநாளைப் போவாரது திருப்பதி மேற்காநாட்டில் உள்ள ஆதனூர் எனவும், குறும்ப நாயனாரது திருப்பதி மிழலை நாட்டுப் பெருமிழலை எனவும், செருத்துணையாரது திருப்பதி மருகல் நாட்டுத் தஞ்சாவூர் எனவும் அடிகள் கூறியிருத்தலால் நன்கறியலாம். இத்தகையார், புகழ்த்துணையாரது திருப்பதியாகிய செருவிலிபுத்தூர் எந்நாட்டில் உள்ளது என்பதை உணர்த்தாமைக்குக் காரணம் புலப்படவில்லை. இந்நிலையில், உமாபதி சிவனார் அஃது அழகார் திருப்புத்தூர் என்று எவ்வாறுணர்ந்தனரென்பது ஆராய்தற்குரிய தொன்றாகும்.

இனி, ஏழாந் திருமுறையில் புகழ்த்துணையார் வரலாற்றைக் கூறும் பாடல் ஒன்று உளது. அது சைவசமய குரவராகிய சுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளிய அரிசிற்கரைப்புத்தூர்ப் பதிகத்தில் உள்ளது. அஃது,

’அகத்தடிமை செய்யு மந்தணன்தான் அரிசிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்
மிகத்தளர்வெய்திக் குடத்தையு நும்முடிமேல் விழுத்திட்டு நடுங்குதலும்
வகுத்தவனுக்கு நித்தற்படியும் வருமென் றொருகாசினை நின்ற நன்றிப்
புகழ்த்துணை கைபுகச் செய்துகந்தீர் பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே’

என்பதாம். இப்பாடலில் கூறப்பெற்றுள்ள புத்தூர், அரிசில் என்னும் ஆற்றின் தென்கரையிலிருத்தலால் அரிசிற்கரைப்


(புலம்பவான் அருளாவீந்த
நண்ணலரும் ஒருகாசுப்படியால் வாழ்ந்து நலமலிசீர் அமருலகம் (நண்ணீனாரே திருந்தொண்டர் புராணசாரம். பா.61.