உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

131


அவ்வூர் மடாலயத்தெழுந் தருளியிருந்த ஆளுடைய பிள்ளையார் இந்நிகழ்ச்சியறிந்து, திருக்கோயிலையடைந்து, சிவபெருமானைத் துதித்துப் பதியமோதி, அவனை உயிர்பெற்றெழச் செய்து, பின்னர் அவ்விருவரையும் அவ்விடத்திலேயே திருமணஞ்செய்து கொண்டு செல்லவேண்டுமென்று திருவாய் மலர்ந்தருளலும், இதனைக் கேட்ட வணிகன் தனது உறவினர்களும் மன்றற்குரிய சான்றுகளுமின்றி மணமுடித்தற் குடன் படானாய் நிற்க, கருணையங் கடலாங் காழிவள்ளலார், "உன்மன்றற்கு ஈண்டுக் காணப்படும் வன்னியும் கிணறும் இலிங்கமும் சான்றுகளாகு" மென் றுரைத்துத் திருமணம் புணரும்படி கூறலும், அவ்விருவரும் அப்பெருமானாணையைக் கடத்தற் கஞ்சினோர்களாய் அவ்விடத்து மணஞ்செய்து கொண்டு, மதுரையை யடைந்து வாழ்ந்துவரும் நாளில், அவ்வணிகன் மூத்தமனைவியின் புத்திரர்களும் இளையாள் மைந்தனும் சண்டையிட்டுக் கொள்ள, அதனால் மூத்தாள் கோபமூண்டு இளையாளை நோக்கி, ”முறைமையான ஜாதி, குலம், ஊர், பேர் முதலியன வின்றி எனது கணவனைக் காதலித்துப் பின்றொடர்ந்து வந்த காமக் கிழத்தியாகிய நீ என்மணாளனை மணந்ததற்குச் சான்றுகள் உளவாயின், சொல்லுக!” என்று கூறலும், இதனைக் கேட்ட இளையாள் நாணமுற்று, 'என்னாயகன் அரவாவிறந்த ஞான்று ஆருயிரீந்தருளிய ஆளுடைபிள்ளையாரருளினால் ஆண்டருகேயிருந்த வன்னியும் கிணறும் இலிங்கமும் எம்மன்றற்குச் சான்றுகளாயுள' என்று கூறலும், இதனைக்கேட்ட மூத்தாள் நகைத்து “நின்மன்றற்கேற்ற சான்று களுரைத்தனை! நல்லது! அவை யீண்டுவருமாகில் அதுவும் மெய்யே!“ என்றுரைக்க, இளையாள் மிக்க துயரத்துடன் சிவ பெருமானை நினைந்து அற்றைநாளிரவு உண்டியு முறக்கமு மொழிந்து பிற்றை நாளிற் பொற்றாமரையில் மூழ்கி, புனித வெண்ணீறணிந்து ஆலவாயுறை யிறைவனைப் பன்முறைவணங்கி யெழுந்து அடியார்க்கு நல்லாய்! நச்சினார்க்கினியாய்! ஆலமுண்ட வருட்பெருங்கடலே! எனது நாயகன் என்னை மணந்தஞான்று ஆண்டுச் சான்றுகளாயிருந்த நீயும் வன்னியும் கிணறும் இவண் எழுந்தருளி என்மாற்றாள் நகைப்பையும் ஐயத்தையும் ஒழித்து எளியேனைக் காத்தருளா யேல், யான், எனதாருயிர் துறப்பேன்”