உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

117


விட்டுப் புறப்பட்டுவிடுதல் வேண்டும்; அதற்குரிய ஏற்பாட்டை முன் இரவிலேயே செய்து வைத்தல் வேண்டும் என்ற எண்ணங்கள் என் உள்ளத்தை இப்போது பற்றிக் கொண் டிருக்கின்றன.

சென்னை ஆசிரியர் அவர்கள் :- என் உள்ளம் இறைவன் திருவடியைப் பற்றிக்கொண்டு நிற்கின்றது. புறக்கரணங்கள் எவ்வேலையில் ஈடுபட்டிருந்தாலும் என் உள்ளம் மாத்திரம் இறைவன் திருவடியில்தான் பதிந்து நிற்கும்.

தஞ்சைப் பெரியார் அவர்கள் :- மிக நல்லது! உங்கள் நிலை பெறுதற்கரியது, இந்நிலை யாருக்கும் எளிதில் கிட்டுவதன்று; திருவருளால் இதனை நீங்கள் பெற்றிருப்பது பற்றிப் பெரிதும் மகிழ்கின்றேன். என் உள்ளம் இப்போது எதனைப் பற்றிக் கொண்டுள்ளது என்பதை நீங்கள் அறிய விரும்புவீர்கள் அல்லவா? அதனையும் சொல்லிவிடுகிறேன். இப்போது மணி ஏழுக்குமேல் இருக்கலாம். பாடங்கேட்கும் மாணவர்கள் வந்து காத்துக் கொண்டிருப்பார்களே; அரை மணிக்கு முன்னரே போயிருக்கலாமே என்ற எண்ணங்கள் என் உள்ளத்தில் ஊடாடிக் கொண்டிருக்கின்றது.

இவ்வாறு வடலாற்றின் தென்கரை வழியாக உரையாடிக் கொண்டு வந்த மூவரும் மாலைக்கடன் ஆற்றும் பொருட்டு ஒரு படித்துறையில் இறங்கினார்கள். அப்போது சென்னை ஆசிரியர் தம் கால் வழுக்கி விட்டமையால் திடீரென்று ‘அப்பாடா’ என்னும் சப்தத்துடன் படித்துறையில் வீழ்ந்தனர்; அடிபடவில்லை; ஆனால் ஆடைகள் மாத்திரம் தண்ணீரில் நனைந்து போய்விட்டன. பிறகு, அவர் எழுந்து அவற்றைப்பிழிந்து கட்டிக்கொண்டனர். பின்னர் மூவரும் திருநீறணிந்து மாலை வழிபாடு புரிந்து, வீட்டிற்குத் திரும்பினார்கள்.

அப்போது, தஞ்சைப் பெரியார், சென்னை ஆசிரியரையும் தம் மாணவரையும் பார்த்து, "படித்துறை நிகழ்ச்சி எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது; அது அந்த அளவில் எளிதாகப் போய்விட்டமை மனத்திற்கு ஓர் ஆறுதல் அளிக்கின்றது. அந்நிகழ்ச்சி நமக்கு ஓர் உண்மையை உணர்த்தும்பொருட்டு இறைவன் திருவருளால் நிகழ்ந்தது என்றே எண்ணுகிறேன்.