உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


கொண்டபொருள் மேலே குறித்துள்ள கல்வெட்டினால் விளக்க முறுதல் காண்க.

8. சாத்தனூரும் திருவாவடுதுறையும் :- சோழ மண்டலத்தில் சாத்தனூர் என்ற ஊர் ஒன்றுளது. இதுவே அறுபத்து மூன்று அடியார்களுள் ஒருவராகிய திருமூல நாயனார் வாழ்ந்த தலமாகும். இதற்கு அண்மையில் திருவாவடு துறை என்ற தலம் உளது. இது திருஞான சம்பந்த சுவாமிகளுக்குச் சிவபெருமான் ஆயிரம் பொன் அடங்கிய பொற்கிழி யொன்றை அளித்தருளிய தலமாகும். இங்குள்ள ஒரு கல்வெட்டு[1] இவ்வாலயத்தின் பெயரே திருவாவடுதுறை என்றுணர்த்துவதோடு இஃது அமைந்துள்ள ஊர் சாத்தனூர் என்றும் கூறுகின்றது. எனவே, சாத்தனூர் என்னும் திருப்பதியிலுள்ள சிவாலயமே திருவாவடு துறை என்னும் பெயருடன் முற்காலத்தில் நிலவிற்று என்பது ஒரு தலை. இதனை வலியுறுத்தும் மற்றொரு சான்றுசேந்தனார் பாடியுள்ள திருவிசைப்பாவில் திருவாவடுதுறைப் பதிகத்தில் உளது. அஃது,

ஒழிவொன்றிலாவுண்மை வண்ணமும் உலப்பிலளு றின்ப வெள்ளமு
மொழிவொன்றிலாப் பொன்னித்தீர்த்தமு முனிகோடி கோடியாமூர்த்தியும்
அழிவொன்றிலாச் செல்வச்சாந்தையூர் அணியாவடுதுறையாடினாள்
இழிவொன்றிலா வகையெய்திநின் றிறுமாக்கு மென்னிள மானனே.

என்பதாம். இப்பாடலில் வந்துள்ள சாந்தை என்பது சாத்தனூர் என்பதின் மரூஉ ஆகும். 'சாந்தையூர் அணியாவடுதுறை' என்னுந் தொடர் மொழிகள் சாத்தனூரில் உள்ளது ஆவடுதுறை என்னுந் திருக்கோயில் என்பதை விளக்கி நிற்றல் ஈண்டு அறிதற் குரியதாகும். சமய குரவர்களது தேவாரப்பதிகங்களை ஆராயின், சிலதிருப்பதிகளிலுள்ள திருக்கோயில்களுக்குத் தனிப் பெயர்கள் இருத்தல் புலனாம். காவிரிப் பூம்பட்டினத்துக் திருக்கோயில் பல்லவனீச்சுரம் எனவும், கோவந்த புத்தூரிலுள்ள திருக்கோயில் விசயமங்கை எனவும், கருவூரிலுள்ள திருக்கோயில் ஆனிலை எனவும், சாத்த மங்கையிலுள்ள திருக்கோயில் அயவந்தி எனவும் பெயரெய்தியிருத்தலைத் தேவாரப் பதிகங் களால் அறியலாம்.


  1. Inscription No. 117 of 1925