உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

43


நாட்டின் அடியாகத்தோன்றிய குலப்பெயர் தனித்து வழங்கிவரின் அஃது அந்நாட்டின் அரசர் குலத்தினரையே குறிக்குமென்பது மிகத்தெளிவாய் விளங்குகின்றது. இது நூல்வழக்கானும் உலகவழக்கானும் ஒருங்கே உறுதியெய்துதல் காண்க.

இத்துணையும் கூறியவாற்றால், நாம் அறிந்துகொள்ளு மாறு முயன்ற ‘மழவர்’ என்பார் மழநாட்டில் வசித்தோர் ஆதல் வேண்டு மென்பது நன்கு புலப்படுகின்றது. நாட்டினடியாகப் போந்த 'மழவர்' என்ற குடிப்பெயர் பிறகுலப் பெயரோடு இணைந்து வழங்கப் பெறாது தனித்து வழங்கிவருதலைச் சங்க நூல்களில் காண்கின்றோ மாகலின் இன்னோர் ( மழவர்) அந்நாட்டில் அரசு புரிந்துவந்த அரசர் குலத்தினராதல் தெள்ளிது. இதனால் மழநாட்டிலுள்ள அரசர்குலத்தினரே சங்கத்துச் சான்றோர்களால் 'மழவர்' என்று வழங்கப் பெற்றுள்ளனரென்பது இனிதுணரப்படுகின்றது. இன்னோர், மழநாட்டினடியாகத் தோன்றிய 'மழவர்' என்ற குடிப்பெயரையே தமக்குரிய குலப்பெயராகக் கொண்டுள்ளமையால் இவர்களது தாய்நாடு மழநாடாகுமென்பது நன்கறியப்படும். இம்மழநாடு 'மழபுலம்'[1] என்றும் அழைக்கப்பெறும்.

இனி, இம்மழநாடு யாண்டுள்ளதென்பதை யாராய்வாம். இது தமிழ்மொழிக்கே சிறப்பெழுத்தாயுள்ள 'ழ'கரம் பயின்றுள்ள பெயருடையதாயிருக்கின்றது. ஆதலால், இது நம் தமிழகத்தில் அடங்கியுள்ளதொரு நாடாதல்வேண்டும். ஆசிரியர் தொல்காப்பியனாரானும் பவணந்தியாரானும் கூறப்பெற்ற செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்துள்ள பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடுகளுள்[2] மழநாட்டின் பெயரைத் தொல்காப்பியத்திற் குரைகண்ட பெரியாருள் எவருங் கூறக்கண்டிலம். உரையாசிரியர்களால் கூறப்பெறாத பல நாடுகள் நம் தமிழகத்தில் உளவென்பது,


  1. கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
    மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
    விழவுடை விழுச்சீர் வேங்கடம் (அகம். 61)

    அகநானூற்றின் முற்பகுதியிலுள்ள சில பாடல்களுக்குக் குறிப்புரை எழுதியுள்ள பண்டையாசிரியர் 'மழபுலம்' என்பதற்கு மழநாடு என்று பொருள் எழுதியுள்ளார்.

  2. கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டாவன :- தென்பாண்டி, குட்டம், குடம், கற்கா, வேண், பூழி, பன்றி, அருவா, அருவாவடதலை, சீதம், மலாடு, புனனாடு.