துளு நாட்டு வரலாறு
13
150 மைல் நீளம் உள்ளது. இதன் அகலம், கடலுக்கும் மலைகளுக்கும் இடையே சில இடங்களில் 50 மைலும் சில இடங்களில் 25 மைலும் ஆக அமைத்திருக்கிறது. எனவே, துளுநாடு கடலுக்கும் மலைக்கும் இடையிலே உள்ள அகலம் குறைந்த நீளமான பிரதேசம் என்பது தெரிகிறது. (படம் 1 காண்க)
இனி, சங்க இலக்கியங்களிலே கூறப்படுகிற துளுநாட்டு ஊர்கள் மலைகள் முதலியவற்றை ஆராய்வோம்.
துளுநாடு (கொண்கானம்)
‘தோகைக் காவின் துளு நாடு’ என்று மாமூலனார் என்னும் புலவர் துளுநாட்டின் பெயரைக் கூறுகிறார். துளுநாட்டுக் காடுகளில் தோகைகள் (மயில்கள்) இருந்தன என்று கூறுகிறார்.
துளுநாட்டை நன்னன் என்னும் பெயருள்ள வேள்குல அரசர் ஆண்டனர். அவர்கள் 'கொண்கானம் கிழான்' என்றும் பெயர் பெற்றிருந்தனர். அதாவது கொண்கான நாட்டுக்குத் தலைவன் என்பது பொருள். பாலைபாடிய பெருங்கடுங்கோ என்னும் சேர அரசர் தாம் பாடிய நற்றிணை 391ஆம் செய்யுளில், 'பொன்படு கொண்கான நன்னன்'என்று கூறுகிறார். மோசிகீரனார் என்னும் புலவர் 'கொண்கானம் கிழான்' ஒருவனைப் பாடுகிறார். அதில் கொண்கான நாட்டின் மலைகளில் பல அருவிகள் பாய்வது தூய வெண்ணிற ஆடைகளை வெயிலில் உலர்த்துவதுபோல இருந்தன என்று
கூறுகிறார்.
1. அகம். 15: 5