172 கலைஞர் மு. கருணாநிதி அக்னியூவின் திட்டத்தைக் கேட்டு உறங்காப்புலி புளகாங்கிதமுற்றான். ஆங்கிலேயர் மூளையே மூளை யென்று புகழ்ந்துரைத்தான். அந்த அரிய பணியை அட்டியின்றிச் செய்து முடிப்பதற்காக ஐந்நூறு சவரன் கொண்ட பண முடிப்பு ஒன்றையும் உறங்காப்புலியின் கையில் எலும்புத் துண்டைப்போல வீசியெறிந்தான், அக்னியூ துரைமகன்/ வீழ்ந்து வணங்கி விடைபெற்றுக் கொண்டான் உறங்காப்புலி! துரோகிகள் எவ்வளவு எளிதாகக் கிடைக்கிறார்கள்-விலை சற்று அதிகமானாலும் பரவாயில்லை; சாம்ராஜ்யத்தை விரிவாக்கவும் வலுப்படுத்தவும் இப்படிப்பட்ட சதிகாரர்கள் நமது வலையில் விழும்பொழுது நமக்கென்ன குறை என்ற தெம்புடன், தனது போர்த் திட்டங்களை முறைப்படுத்தும் பணியிலே ஈடுபட முனைந்தான் அக்னியூ! அவன் வகுத்தளித்த திட்டத்திற்கு மேலும் மெருகு கொடுத்து வல்லத்தரையனை ஊழித்தீப் போல ஆக்கினான் உறங்காப்புலி! தன் கணவன் ஆங்கிலேயர்க்குத் துணை போன துரோகச் செயலைத் தனது அண்ணனிடமோ, தம்பியிடமோ - வேறு யாரிடமோ வெளியிடமாட்டாள் வீரம்மாள் என்ற தைரியம் வேறு உறங்காப்புலிக்கு! அதனால் சுரண்டைக் காட்டுப் பகுதியில் கறுத்த ஆதப்பனும் அவனது ஆட்களும் சேர்ந்து தன்னைத் தாக்கியது மாத்திரமல்லாமல் பட்டமங்கலத்து அம்பலக் காரர்கள் குடும்பத்தை மிக இழிவாக அர்ச்சித்தனர் என்றும் கதை கட்டினான். வீரம்மாளும் அந்தக் கதையைக் கேட்டுக் கொண்டி ருந்தாள் என்றாலும் உண்மையில் நடந்த நிகழ்ச்சிகளை அண்ணனிடம் எடுத்துரைத்துக் கணவனுக்குக் களங்கம் உண்டாக்கத் துணியவில்லை. வைரமுத்தனும் அந்தக் கலக விதை ஊன்றப்படும்பொழுது அங்கில்லை.
பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/187
Appearance