பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்மொழி 7


அற்றைத் தமிழின் அகரமுதல் உள்ளவரை-
தாயின் மடியிறுத்தி ஆகத் தணைத்துவந்து
வாயின் அமிழ்தும், வளர்நெஞ்சில் முத்தமிழும்
ஊட்டியவள் எண்ணம்எம் உள்ளத்தே உள்ளவரை
மூட்டியதோர் நல்லுணர்வெம் மூச்சில் இயங்குவரை-
அன்னை தமிழின் அரியணையில் இந்தியெனும்
பின்னை முகடியாம் பேதைக் கிடமளியோம்!
ஓரிரண்டு கொள்கை உடும்புப் பிடியாலே
ஊரண்டு பண்ணி ஒருநூறு தோற்றமாய்க்
காட்சிதரும் கட்சித் தலைவர்களே! உங்கட்கும்,
மீட்சியற்றுச் சாகும் தமிழர்க்கும் மீண்டுரைப்போம்:
அன்னை மொழிவீழ்ச்சி அவ்வினத்தின் வீழ்ச்சி;இதை
முன்னை வரலாறு மெய்ப்பிக்கும்; முதமிழீர்!
தாய்மொழிக்குக் காப்புரிமை வாங்காத் தகைமையால்
வாய்மொழிக்குப் பூட்டிட்டார் என்னும் வரலாறே
ஈழத்தில் இக்கால் இருக்குநிலை! செந்தமிழீர்!
வாழத்தான் வேண்டுமெனில் நந்தமிழ்க்கு வாழ்வளிப்பீர்!
இன்றேல் தமிழர் இனமழிவ தெஃகுறுதி!
நன்றே அறிகுவீர்! நாளை அழிந்தொழிவீர்!
இந்திமொழிக் கென்றும் இடமளியீர்! நல்மறவீர்!
எந்தமிழைக் காப்பீர் இணைந்து!

திருவாட்டி. நேயமணி தேவநேயன்


மறைந்தார்:


மொழிப்பெரும் புலவர் திரு.ஞா.தேவநேயப்பாவாணர் அவர்களின் அருமை மனைவியார் திருவாட்டி: நேயமணி அம்மையார் ஐப்பசி 10-ஆம்நாள் (27-10-63) அன்று, இரவு 11-மணியளவில் திடுமெண இவ்வுலக வாழ்வை நீத்தார் என்பதைத் தமிழ் அன்பர்கட்கு மிகப்பெரும் வருத்தத்துடன் கூறிக் கொள்கின்றோம். அன்பும், பண்பும் ஒருங்கே விளங்கப் பெற்றுப், பாவாணர் அவர்களின் தனித்தமிழ்ப் போராட்டங்கட்கு, பெருந்துணையாய் நின்று ஊக்கமளித்த அப் பெருமாட்டியயைப் பிரிந்து, கையற்று நிற்கும் பாவாணர் அவர்கட்கும், அன்னையைப் பிரிந்து ஆறாத் துயருறும் குழந்தைச் செல்வங்கட்கும், நம் ஆற்றுமையைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.தண்டமிழ்த் தாயின் அருந்தமிழ் மகனாய பாவாணர்க் கேற்பட்ட இப்பேரிழப்பு ஈடு செய்ய வியலாத தொன்றாகும். -- ஆசிரியர்.