இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நெப்போலியன் நினைக்கின்றான் மின்னலிடை மாதரசி முகத்தி லுள்ள விளக்கேற்றி விளையாடும் பருவப் பெண்ணே! இன்னமுதே தாந்தேயின் கவிதை போல இனிப்பவளே ஜோசபையின் குயிலே கண்ணே! உன்வதனம் பாராமல் விண்ணில் நீந்தும் ஒரேநிலவைப் பார்க்கின்றேன் நெடுநா ளாக என்னருகே நீயில்லை அதனால் ஏதும் இனிக்கவில்லை இரவிருந்தும் பயனே இல்லை! பொன்முடிபோற் சிறந்தவளே பிரான்சு நாட்டின் பூந்தோட்டம் போன்றவளே பளிங்குப் பெண்ணே! என்னைவிட மூத்தவள்நீ எனினும் நல்ல - இளந்தளிரைப் போன்றவள்நீ இன்பக் கேணி நின்றுநின்று மயக்கி வரும் மயில்நீ ஈர நிலவும்நீ நித்திரைச்சத் திரமும் நீயே தின்பனவும் உண்பனவும் இரவில் தொட்டுத் திறக்கின்ற புத்தகத்தின் தொகுப்பும் நீயே!