இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
37
போலி உடும்பு
உனக்கொரு செய்தி சொல்வேன்
உற்றுக்கேள் பல்லி யேநீ
தனிக்குரல் பெற்றாய் யானோ
தமிழ்க்குரல் பெற்றேன் நீயோ
கனைக்கிறாய் அதனா லன்றோ
'கனைகுரற் பல்லி' என்று
பனித்தமிழ் சக்தி முற்றப்
பாவலன் பாடி வைத்தான்.
கருங்கடல் ஒய்வே இன்றிக்
கனைத்தல்போல் கனைத்தா யேனும்
பெருங்கடல் ஒசை கேட்டே
பெரும்புவி அச்சங் கொள்ளும்
இருப்பினும் ஈக்கள் உன்றன்
ஈரவாய் ஒசைக் கஞ்சும்
வரிப்புலி நீயே என்றால்
ஈக்களே உனக்கு மான்கள்!
தலையில்நீ வந்து வீழ்ந்தால்
சண்டையாம்; தோளில் வீழ்ந்தால்
நலம்பல பெருகு மென்பர்
நானிதை நம்ப வில்லை.
இலர்பலர் இந்த நாட்டில்
எண்ணற்றோர் எனவே அன்னார்
வலம்புறத் தோளில் வீழ்ந்தே
வாழச்செய் எங்கே பார்ப்போம்?