பக்கம்:தேவநேயம் 1.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவநேயம் அதிகாரிகளின் அமாத்தம் பெயர் உடனுடன் குறிக்கப்பெறும். எல்லாப் பெயருங் குறிக்கப் பெற்றபின், வாரியப்பகுப்பு நடைபெறும். ஓர் ஊரில் முப்பது குடும்புகளிருப்பின், மேற் கூறியவாறு முப்பது உறுப்பினர் தேர்ந்தெடுக்கப் பெறுவர். அவருள், ஆண்டிலும் அறிவிலும் முதிர்ந்தோரும், ஏற்கெனவே ஏரிவாரியமும் தோட்ட வாரியமும் செய்து பயிற்சி உடையவரும், காரியவாற்றலும் நடுவுநிலையுமுடையவருமான, பன்னிருவர் முதலாவது ஆட்டை வாரியம் என்னும் ஊர்வாரியமாகத் தெரிந்தெடுக்கப்பெறுவர். எஞ்சியவருள், பன்னிருவர் தோட்டவாரியமாகவும், அறுவர் ஏரி வாரியமாகவும், தகுதிப்படி அமர்த்தப்பெறுவர். பின்பு, மீண்டும் முப்பது உறுப்பினர் முன்போன்றே குடவோலை வாயிலாய்த் தேர்ந்தெடுக்கப் பெறுவர். அவருள், அறுவர் பொன் வாரியமாகவும், அறுவர் பஞ்சவாரவாரியமாகவும் அமர்த்தப் பெறுவர். வேறுசில வாரியங்களும் அவ்வூரிலிருப்பின், ஒவ் வொன்றிற்கும் அவ்வறுவராக எஞ்சியவரும் அமர்த்தப் பெறுவர். தேர்தல் முடிந்த பின், அது ஏதேனுமொருவகையில் புது முறை யாக நடந்திருப்பின், அதன் நடைமுறை கல்லில் வெட்டப்பட்டுக் கோயிலில் அல்லது ஊர் மண்டபத்தில் பதிக்கப்பெறும். புதிதாய் அமர்த்தப்பெற்ற வாரியத்தார் ஓர் ஆண்டு முழுதுந் தத்தங் கடமையைச் செவ்வனே நிறைவேற்றல் வேண்டும். கடமை தவறியவரும் குற்றஞ் செய்தவரும், உடனே நீக்கப்பட்டுக் குற்றப் புத்தகத்தில் பதிவு செய்யப்படுவர். ஊர்ச் சபைக் கணக்கு எழுதற்கு, உண்மையும் சுறுசுறுப்பும் கணிதத்திறமையுமுள்ள ஒருவன் அச்சபையால் அமர்த்தப் படுவான். அவன் தன் கணக்குகளைச் செவ்வையாய் வைத்திருந்து, எந்தச் சமயத்தில் வாரியர் கேட்டாலும் காட்டல் வேண்டும். அங்ஙனங் காட்டத்தவறினும், சரியாய்க் கணக்கெழுதாவிடினும், வேறு குற்றஞ்செய்யினும் ஓராண்டிறுதியில் நீக்கப்படுவான். எவ்வகைக் குற்றமும் அற்றவனாயின், அடுத்த ஆண்டும் அவன் வேலை தொடரும். கரணத்தானுக்குச் சம்பளம், ஒரு நாளைக்கு ஒரு நாழி நெல்லும், அதனொடு ஓராண்டிற்கு ஏழு கழஞ்சு பொன்னும் இரு கூறையு மாகும். அவனுக்குக் கொடுக்கப்படும் நெல் கணக்கமேரை எனப்படும். ஆண்டிறுதியில், அவன் ஆட்டைக் கணக்கை அதிகாரிகட்குக் காட்டும்போது, தன்னிடத்தில் பொய்மையில்லை யென்பதை மெய்ப்பித்தற்கு, பழுக்கக் காய்ச்சிய மழுவைக் கையில் ஏந்த வேண்டும், அதனால் ஊறு நேராவிடின் காற்பங்கு பொன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/185&oldid=1431681" இலிருந்து மீள்விக்கப்பட்டது