பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87



பெருமானார் அவர்கள் தாங்களே வீட்டைப் பெருக்குவார்கள்; நெருப்புப் பற்ற வைப்பார்கள். தங்கள் உடைகளைத் தைத்துக் கொள்வார்கள்.

எவ்வளவோ வசதிகளைச் செய்து கொள்ளக் கூடிய வாய்ப்பும், வசதியும் இருந்தும் அவர்கள் அவற்றையெல்லாம் விரும்பாமல், சாதாரணமாகவே இருப்பார்கள்.

அவர்களுடைய எளிய வாழ்க்கை மக்களைப் பெரிதும் கவர்ந்தது. மதீனாவில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும், பெருமானார் அவர்களிடம் சிறப்பு மிக்க மதிப்பு வைத்திருந்தார்கள்.


67. ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தல்

பெருமானார் அவர்களோடு உடன் இருந்த தோழர்கள் சிலர் மத சம்பந்தமான தொண்டோடு வியாபாரம், விவசாயம் முதலானவற்றில் ஈடுபட்டு வந்தார்கள். மற்றும் சிலர் இறை வணக்கத்திலும், பெருமானார் அவர்களுடன் இருந்து கற்றுக் கொள்வதிலுமே காலம் கழித்தனர். ஆனால், அவர்களுக்குக் குடும்பப் பாரம் இல்லை. திருமணமானதும், அவர்கள் அக்குழுவை விட்டு விலகிக் கொள்வார்கள்.

அவர்களில் சிலர், காட்டுக்குப் போய் விறகு வெட்டி வந்து விற்று, அதைக் கொண்டு, மற்ற சகோதரர்களுக்கு உணவு தயாரித்து அளிப்பார்கள். அக்குழுவினர், பகலில் பெருமானார் அவர்கள் முன்னிலையில் இருந்து, அவர்கள் திருவாய் மலர்ந்து அருளும் அறிவுரைகளைக் கவனத்தோடு கேட்டவாறு இருப்பார்கள். அவர்கள் எல்லோரும் சில சமயங்களில், இரண்டு நாட்கள் கூட உணவின்றி இருப்பார்கள். அப்படி இருக்கும் போது, பெருமானார் அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழும் போது, அவர்களும் சேர்ந்து தொழுவார்கள். ஆனால் பசியினால் ஏற்பட்ட களைப்பால் தொழுது கொண்டிருக்கும் போதே, கீழே விழுந்து விடுவார்கள்.

பெருமானார் அவர்களுக்கு விருந்தினர்கள் வந்தால், அவர்களையும் சேர்த்துக் கொள்வார்கள். சில சமயங்களில் இரவு நேரங்களில், அவர்களில் ஒருவர் அல்லது இருவரைத் தகுதிக்குத்