பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186



அரபு நாட்டில் அதிக செல்வாக்குள்ள கத்பான் குடும்பத்துக்கும், கைபர் யூதர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. அந்த இரு கோத்திரத்தினரும் நட்புறவு உடன்படிக்கை செய்து கொண்டிருந்தார்கள்.

ஹிஜ்ரி 6-வது ஆண்டு, அபூராபி யூதர் தலைவர் கத்பான் கோத்திரத்தாரிடம் சென்று, அவர்களையும், அவர்களைச் சேர்ந்தவர்களையும் இஸ்லாத்துக்கு விரோதமாகச் சண்டை செய்யுமாறு தூண்டிவிட்டார். அவர்கள் மதீனாவைத் தாக்குவதற்குப் பெரிய படையைத் திரட்டித் தயாராகி விட்டார்கள்.

அப்பொழுது ரமலான் மாதம். யூதர் தலைவர் அபூராபி கைபர் கோட்டையில் தூங்கிக் கொண்டிருக்கையில், அன்ஸாரி ஒருவர் அங்கே போய், அவரைக் கொன்று விட்டார்.

அவருக்குப் பின், யாஸிர் என்பவர் தலைமைப் பதவியை ஏற்றார். யூதர்களையும், கத்பான் கூட்டத்தாரையும் இணைத்து, மதீனாவைத் தாக்குவதற்கு, அவரும் பெரும் படையைத் திரட்டினார்.

இச்செய்தியை அறிந்த பெருமானார் அவர்கள், யாஸிரை அழைத்து வருமாறு முப்பது பேரை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் போய் யாஸிரை அழைத்துக் கொண்டு திரும்பும் போது, யாஸிருக்கு ஏதோ சந்தேகம் தோன்றி, முஸ்லிம் ஒருவரின் வாளைக் கைப்பற்ற் முற்பட்டார். ஆனால் வீரரோ, குதிரையை விரைவாகச் செலுத்தினார். யாஸிர் அவரை வேகமாகப் பின் தொடர்ந்து வெட்ட முயன்றார். ஆனால், அந்த முஸ்லிம் யாஸிரை வெட்டவே, அவர் கீழே விழுந்தார். அப்பொழுது வெட்டிய முஸ்லிமையும் அவர் காயப்படுத்தி விட்டார்.

அதிலிருந்து முஸ்லிம்களுக்கும், யாஸிருடன் வந்த முப்பது யூதர்களுக்கும் சண்டை மூண்டது. யூதர்களிலே ஒருவர் மட்டுமே தப்பினார்.

கைபரிலுள்ள யூதர்கள் குறைஷிகளையும், கத்பான் கூட்டத்தாரையும், முஸ்லிம்களுக்கு விரோதமாகச் சண்டை செய்யுமாறு தூண்டி விட்டுக் கொண்டிருந்தார்கள்.