பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

219


முஸ்லிம் சேனைக்கு காலித் தலைமை வகித்திருந்தார்.

அம்புத் தாக்குதலை எதிர்க்க இயலாமல், மக்கா சேனை பின்வாங்கியது. அதனால் முஸ்லிம் சேனையில் பெரிய குழப்பம் உண்டாயிற்று. பின்னணியிலிருந்த சேனையும், முன்னணியிலிருந்த சேனையும் நெருக்கடியால் பின் வாங்கும்படி நேரிட்டது. சிறிது நேரத்தில், முஹாஜிர்கள், அன்ஸாரிகள் அடங்கிய சேனையும் அந்தக் குழப்பத்தில் சிதறி விட்டது.

பெருமானார் (ஸல்) அவர்களும், அபூக்கர், உமறு, அலீ, அப்பாஸ், அபூ ஸூப்யான், உஸாமா (ரலி-அன்ஹூம்) ஆகிய தோழர்களும் ஒரு புறம் நின்று கொண்டிருந்தனர். பகைவர்களின் சேனையோ, பெருமானார் அவர்களை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. அவ்வாறு இருந்தும் கூட, ஆண்டவன் தங்களுக்கு உதவி செய்வான் என்ற முழு நம்பிக்கையோடு, பகைவர்களின் கூட்டத்தைப் பொருட்படுத்தாமல் நின்று கொண்டிருந்தார்கள்.

பெருமானார் அவர்கள் வலப்பக்கமாகத் திரும்பி, “அன்ஸாரிக் கூட்டத்தாரே” என்று குரல் எழுப்பினார்கள். “இதோ தயாராக இருக்கின்றோம்” என்று விடை வந்தது. அதன் பின் இடப்பக்கம் திரும்பி, முன் போலவே குரல் எழுப்பினார்கள். முன்னர் கிடைத்தது போலவே இப்பொழுதும் விடை கிடைத்தது.

பெருமானார் அவர்கள், “நான் ஆண்டவனுடைய தூதன்; அப்துல்லாஹ்வின் மகன். என்னிடம் வாருங்கள்!” என்று எல்லோரையும் அழைத்தார்கள்.


169. சிதறிய படைகள் ஒன்று திரண்டன

ஹூனைன் யுத்த களத்தில், பெருமானார் அவர்கள், அன்ஸாரிகளையும், முஹாஜிர்களையும் அழைக்குமாறு அப்பாஸ் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

ஹலரத் அப்பாஸ் உரத்த தொனியில் அவர்களை அழைக்கவே, சிதறி நின்ற முஸ்லிம் வீரர்கள் அனைவரும் திரண்டு வெகு விரைவில் பெருமானார் அவர்கள் பக்கம் கூடிவிட்டார்கள்.