உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

253


சொற்பொருள் : செந்நிலப் புறவு – செம்மண் நிலங் கொண்ட காட்டுப் பகுதி. புன்மயிர் – குறுகலான மயிர். புருவை – யாடுகள். பாடின் தெண்மணி – தெளிவாக ஒலிக்கும் இன்னோசையுடைய மணி. தோடு – தொகுதி; ஆட்டுக் கூட்டங்கள். தலைப்பெயர – வீடு நோக்கித் திரும்புதலை மேற்கொள்ள. கயவாய் அலரி – அகன்ற வாயையுடைய விரிந்த பூக்கள். சாரற்புறத்துப் பார்ப்பன மகளிர் – மலைச்சாரலின் புறத்தேயுள்ள பார்ப்பனச் சேரியிடத்து உள்ளவரான் பார்ப்பன மகளிர்; பார்ப்பனச் சேரி ஊரைச் சேராது தனித்தொதுங்கி இருந்ததாதலின் சாரற் புறத்து என்றனர். 'கல்' என்றது அத்தமன கிரியினை. கதிர்மாய் மாலை – கதிரவனின் கதிர்கள் ஒளிமங்கிவிடும் மாலைக் காலம். 'அரிவை' என்றது, தன்னுடைய மனைவியை. குருந்து – குருந்தமரம். பெருங்கலி மூதூர் – பெரிய ஆரவாரத்தையுடைய மூதூர். குறும் பொறை – குறிய பொற்றைகளைக் கொண்டதான சாரற்பகுதி.

விளக்கம் : ஆடுகள் ஊர்நோக்கித் திரும்புதலும், பார்ப்பன மகளிர் பூச்சூடியிருத்தலும், அவன் வழியிடைக் கண்ட காட்சிகள். அவற்றைக் காண்பவன், தானும் விரைய வீடுசேர்வதையும், தன் மனைவியும் தான் சென்றடைந்த களிப்பினாலே மலர்சூடி மகிழ்தலையும் நினைக்கின்றான். 'மரந்தோன்றும்' என்றதனால், ஊர் அணிமையிலுள்ளதென்பதைக் குறிப்பிட்டுத் தேரை விரைவாகச் செலுத்தும்படி கூறுகின்றனன்.

'முல்லைக் கயவாய் அலரி' என்றது, முல்லை இதழ்விரிந்து மலர்ந்துள்ளதனைக் கண்டு கூறியதாம்.

'பார்ப்பன மகளிர் கார்ப்புறத் தணிய' என வருவன, பார்ப்பாருட் சிலர், அந்நாளில் மருதத்தைவிட்டு முல்லை நிலப்பகுதிகளிலும் சென்று வாழ்ந்து வந்தனர் எனக் காட்டும். மாலை வேளையிலே பார்ப்பன மகளிர் முல்லைக் கயவாய் அலரியை விரும்பித் தம் கூந்தலிற் சூடினர் என்பது, அவர்தம் இன்பமயக்கத்தையும், புனைதல் விருப்பத்தையும் காட்டும். இன்றும் இவர் இவ்வாறு அணிவதனைக் காணலாம்.

பயன் : பாகன் தேரை விரையச் செலுத்தலாலே ஊரை அடைந்தவன், தன் தலைவியைத் தழுவி இன்புற்று மகிழ்வான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/259&oldid=1680363" இலிருந்து மீள்விக்கப்பட்டது