உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

நற்றிணை தெளிவுரை


வாய்த்தற்கு இயலாமையினையும், தன்னைப் பிரிந்துறைதல் ஆற்றாளாய்த் தலைவி கொள்ளும் நோயின் மிகுதியையும் அறிந்தானாய், அவளை வேட்டுவந்து முறைப்படி மணத்தற்கு மனஞ்செலுத்துபவன் ஆவான் என்பதாம்.

'இனிக் களவு நிகழ்தல் கூடாமையின், தலைவன் வரைந்து எய்துதலே செய்யக்கூடியது' என உணர்த்தலின், இது வரைவு கடாயது ஆயிற்று. மெய்ப்பாடு; பெருமிதம்; பயன்; வரைவு கடாதல். உயர்ந்தும் தாழ்ந்தும் ஊசலாடும் தலைவியை 'விசும்பாடு ஆய்மயில் கடுப்ப' என வியந்து கூறியது, தலைவன் தலையளி செய்யானாயின் அந்த அழகு நலம் அழியும் என அவனுக்கு அறிவித்தற்கு ஆகும்.

உள்ளுறை : 'மேகம் மறைத்தலாலே பிடியைக் காணாது வருந்திய களிறு பிளிறும்' என்றது, தலைவனும் நின்னைக் காணாதே நின்போலவே துயருற்றிருப்பன் என உள்ளுறுத்துக் கூறித்தலைவியைத் தேற்றியதாம்; அவனை வரைந்து வருதற்குத் தூண்டியதும் ஆம்.

223. எல்லி வம்மோ புலம்ப!

பாடியவர் : உலோச்சனார்.
திணை : நெய்தல்.
துறை : பகற்குறி வந்து மீள்வானைத் தோழி இரவுக்குறி நேர்வாள் போன்று அதுவும் மறுத்து வரைவு கடாயது.

[(து-வி.) பகற்குறி வந்து மீளும் தலைவனிடம், "எங்கள் ஐயன்மார் அறியின் இவளை இல்லத்தே காவற்படுத்துவர்; இனி எம் இல்லின் அணிமைக்கு இரவுப்போதில் வருக" எனக் கூறுவாள்போல, அதுவும் வாயாமை உணர்த்துதன் மூலம், வரைந்து வருக என்று வலியுறுத்துகின்றாள் தோழி.]


இவள்தன்,
காமம் பெருமையிற் காலையென் னாள்நின்
அன்புபெரி துடைமையின் அளித்தல் வேண்டிப்
பகலும் வருதி பல்பூங் கானல்
இந்நீ ராகலோ இனிதால்! எனின், இவள்
அலரின் அருங்கடிப் படுகுவள்; அதனால், 5
எல்லி வம்மோ மெல்லம் புலம்ப—
சுறவினங் கலித்த நிறையிரும் பரப்பின்
துறையினும் துஞ்சாக் கண்ணர்
பெண்டிரும் உடைத்திவ் அம்பல் ஊரே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/64&oldid=1663994" இலிருந்து மீள்விக்கப்பட்டது