உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

நற்றிணை தெளிவுரை


88. குன்றம் அழும்!

பாடியவர்: நல்லந்துவனார்.
திணை : குறிஞ்சி.
துறை : சிறைப்புறமாகத் தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச் சொல்லியது.

[(து–வி.) வரைதற்கு முயலானாகிக் களவுறவினையே வேட்டுவரும் தலைமகன் குறியிடத்து ஒரு பக்கமாக வந்து நிற்பதறிந்த தோழி, அவன் மனத்தை வரைகலிற் செலுத்த நினைத்தாளாய்த் தலைவிக்கு உரைப்பாள்போன இப்படிக் கூறுகின்றாள்.]

யாம்செய் தொல்வினைக்கு எவன்பே துற்றனை?
வருந்தல்; வாழி! தோழி!– – யாம்சென்று
உரைத்தனம் வருகம்; எழுமதி; புணர்திரைக்
கடல்விளை, அமுதம் பெயற்குஏற் றாஅங்கு. 5
உருகி உகுதல் அஞ்சுவல்; உதுக்காண்
தம்மோன் கொடுமை நம்வயின் எற்றி
நயம்பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது
கண்ணீர் அருவி யாக
அழுமே, தோழி! அவர் பழம்முதிர் குன்றே.

தோழி! யாம் செய்த பழிவினைப் பயன் இவ்வாறாயிருக்கவும், இதுகுறித்து நீ எதற்காகவோ மயங்குகின்றனை? வருத்தம் கொள்ளாதிருப்பாயாக! நெடிது வாழ்வாயாக! நம் துன்பத்தினை நாமே சென்று அவருக்கு எடுத்துக் கூறிவருவோம்; எழுவாயாக. பொருந்திய அலைகளை உடையதான கடலிடத்தே விளையும் அமுதமான உப்பானது, மழையிடத்துப் படின் உருகி ஒழிதலைப்போல, நீயும் இத்துன்பத்திற்கு ஆற்றாயாய் உருகியழிதலைக் கண்டு யான் அச்சமுறுகின்றேன். தன் தலைவன் நம்பாற் செய்த கொடுமையினை நினைந்ததாய், அவர்க்கு உரியதான பழங்கள் உதிர்ந்துகிடக்கின்ற வளத்தையுடைய குன்றமானது, நம்பாற் பெரிதும் அன்புடைமை கொண்டதாதலினாலே, நம் வருத்தத்தைப் பொறுக்கமாட்டாதாய்க், கண்ணீரை அருவியாகச் சொரிந்தபடியே அதோ அழுதபடியிருக்கின்றது. அதனையும், நீயே காண்பாயாக!

கருத்து : 'தலைவரது அன்பினைத் தவறாதே பெறுவோம்; அதனால் நீயும் ஆற்றியிருப்பாயாக' என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/175&oldid=1681609" இலிருந்து மீள்விக்கப்பட்டது