உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

நற்றிணை தெளிவுரை


ஆடுகியல் விழவின் அழுங்கல் மூதூர்,
உடையோர் பன்மையின் பெருங்கை தூவா.
வறன்இல் புலைத்தி எல்லித் தோய்த்த
புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு
வாடா மாலை துயல்வர ஓடிப் 5
பெருங்களிறு நாலும் இரும்பனம் பிணையல்
பூங்கண் ஆயம் ஊக்க ஊங்காள்
அழுதனள் பெயரும் அம்சில் ஓதி
நல்கூர் பெண்டின் சில்வளைக் குறுமகள்
ஊசல் உறுதொழில் பூசல் கூட்டா
நயன்இல் மாக்களொடு கெழீஇப் 10
பயன்இன்று அம்ம இவ் வேநதுடை அவையே!

கூத்தாட்டு நிகழ்கின்ற விழாக்களின் ஒலியைக் கொண்டிருப்பது இம் மூதூர். இதனிடத்தே ஒலிப்பதற்குரிய உடைகளையிடுவோர் பலராதலினாலே, பெரிதும் கை ஓயாதாளாகத் தொழில் செய்திருப்பாள் ஆடையொலிப்பவள். அவள்தான், இரவிலே தோய்த்துக் கஞ்சியிட்டுப் புலர்த்தித் தந்த சிறு பூத்தொழிலையுடைய மல்லாடையுடனே, பொன்னரிமாலையும் தன்பாற் கிடந்து அசைந்தாடுமாறு ஓடிச்சென்று, கரிய பனையினது பெரிதான கயிற்றுப் பிணையலிலே பிணைக்கப்பட்டுத் தொங்கும் ஊசலிலே ஏறினாள். ஏறியிருந்தவள், பூப்போலும் கண்களை உடையவரான தன் ஆயமகளிர் தன்னை ஊக்கிச் செலுத்தவும் தான் ஊசலமர்ந்து ஆடாளாயினள். அழகிய சிலவாகிய கூந்தலையுடைய மனைமாண்பிற் குறைபாடுடைய பரத்தையொருத்தியின், சிலவாகிய வளைகளை அணிந்த ஓர் இளமகள் அவள். அவள் அதன்பின் அழுதபடியே அவ்விடம் விட்டு அகன்று போதலையும் செய்தாள். அதுகண்டும். இவ்வேந்தனைத் தலைவனாக உடைய அவையானது. அவளை மீண்டும் ஊசலயரும் தொழிலிடத்தே செலுத்தி. ஆரவாரத்தை உண்டாகுமாறு செய்யாத அன்பற்ற மக்களோடும் கூடி நிறைந்ததாயிருந்ததே! அதனால், அது நமக்குப் பயனுடைத்தாகாது காண்பாயாக!

கருத்து : 'குறுமகள் மீதே அன்பற்று வாளாவிருந்தவன் அவள் ஊடிய அதனாற்றான் இவ்விடத்து நம்பாலே வந்தனன் போலும்' என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/179&oldid=1683303" இலிருந்து மீள்விக்கப்பட்டது