உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கருத்து : 'ஊரறிய நின்னை வரைந்து கொள்ளற் பொருட்டுத் தலைவன் இங்கே வருகின்றனன்' என்பதாம்.

சொற்பொருள் : உடங்குஇரை தேரும் – ஒருசேரச்சென்று இரைதேடும். பிள்ளை – நாரைக் குஞ்சு. கொட்பு சுழற்சி. கடுமா – கடிதாக ஓடும் குதிரை.

விளக்கம் : 'புன்னை பூத்து மலர் சொரியும்' என்றது, மணத்துக்கு உரியதான காலத்து வரவைக் கூறியதாம்; நெய்தல் நிலத்திற் புன்னை பூப்பதைக் கூறுவது போலக் குறிஞ்சி நிலத்தில் வேங்கை பூப்பதைக் கூறுவது மரபு. 'வண் மகிழ்' என்றது, தலைவியது வீட்டுப் பெருவளனைச் சுட்டியது. அவர் தாம் தலைவன் அளிக்கும் பெரும் பொருளினைப் பாராட்டுவதினும், அவனது தகுதியையும் உழுவலன்பையுமே பெரிதும் கருதுவர் என்றதாம். அவரும் மறாதாராய்க் கொடை நெர்வர் என் குறிப்பாகக் கூறுவாள், 'பெருநல் ஈகை' உடையாரென, அவரது ஈத்துவக்கும் இயல்பினைக் கூறினாள். 'பகல் வரவு' என்றது, களவை ஒதுக்கி வரைதற்குரிய தகைமையோடு பலரும் காணுமாறு வருகின்ற தன்மையைக் கண்டு கூறியதாம்.

உள்ளுறை : 'கூட்டிலிருந்தபடி தாயைக் கூவியழைக்கும் குஞ்சுக்குத், தாயோடு கடலிடத்து இரைதேடச் சென்ற நாரையானது, சிறுமீனைக் கொணந்து வாயிடத்தே சொரியும் கானல்' என்றது, தாயாற் காக்கப்படும் தலைவியது காதலைத் தந்தை நிறைவேற்ற முற்பட்டனனாய்த் தலைவனை அவளோடும் மணங்கூட்டி மகிழ்விப்பான் என்பதாம். வரைபொருட்குச் சென்ற தலைவன், தலைவியின் வீட்டார் விரும்பிய பொருளைத் தந்து தலைவியைப் பெறுவானாகி, அவள் நலிவைத் தீர்ப்பான் என்பதும் ஆம்.

92. நம்மை நினையாரோ?

பாடியவர் :......
திணை : பாலை.
துறை : பிரிவிடை வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது.


[(து–வி.) தலைமகனின் பிரிவினாலே நலனழிந்தவளாயினாள் தலைவி. அவளது துயரத்தை மாற்றக் கருதிய தோழி, தலைவனை இயற்பழித்தாளாக இவ்வாறு கூறுகின்றனள்.]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/182&oldid=1684130" இலிருந்து மீள்விக்கப்பட்டது