200
நற்றிணை தெளிவுரை
அவருரையினைப் போக்குக என அவள் அறிவுறுத்தியதாகக் கொள்க.
பிற பாடம் : 'மாணமர் நோக்கம்'
102. காவலாயினாள்!
- பாடியவர் : செம்பியனார்.
- திணை : குறிஞ்சி.
- துறை : காமம் மிக்க கழிபடர் கிளவி.
[(து–வி.) வரை பொருட்குப் பிரிந்தானாகிய காதலனின் வரவு குறித்த எல்லையைக் கடந்து நீட்டித்தலால், காதலியின் காமநோய் வரைகடந்து பெருகுகிறது; நலிவும் பெரிதாகின்றது. அவள் கிள்ளையை நோக்கித் தன் குறையைச் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]
கொடுங்குரற் குறைத்த செவ்வாய்ப் பைங்கிளி
அஞ்சல் ஓம்பி, ஆர்பதம் கொண்டு,
நின்குறை முடித்த பின்றை, என்குறை
செய்தல் வேண்டுமால்; கைதொழுது இரப்பன்:
பல்கோட் பலவின் சாரல் அவர்நாட்டு
5
நின்கிளை மருங்கின் சேறி ஆயின்,
அம்மலை கிழவோற்கு உரைமதி—இம்மலைக்
கானக் குறவர் மடமகள்
ஏனக் காவல் ஆயினள் எனவே.
முற்றினமையாலே தலைவளைந்த தினைக்கதிர்களைக் கொய்து உண்ணுகின்ற சிவந்த வாயினையுடைய பசிய கிளியே! நின் களவினாலே நினக்கு இடருண்டாமோ என்னும் அச்சத்தை விட்டனையாய், நினக்கு வேண்டுமளவுக்குத் தினையை உண்டுபோவாயாக, பசியாகிய நின் குறையினை அங்ஙனமாக முடித்துக்கொண்ட பின்னர். என் குறையினைத் தீர்த்தற்கான ஒன்றனையும் நீ செய்தல் வேண்டும். அதற்காக நின்னைக் கைதொழுது வேண்டுகின்றேன். பலவான காய்களைக் கொண்ட பலாமரங்கள் மிகுந்த சாரலையுடைய அவரது நாட்டிடத்தேயுள்ள, நின் சுற்றத்தின் பக்கலிற் செல்வாய் ஆயின். 'இம் மலைக்கண்ணுள்ள கானக்குறவரது இளமகளாகிய நின் காதலி, மீட்டும் தினைப்புனம் காக்கும் நிலையினளாக ஆயினாள்' என்று அம் மலைக்கு உரியவராகிய அவரிடத்தே சென்று சொல்வாயாக!