உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

நற்றிணை தெளிவுரை


கணையர், கிணையர், கைபுனை கவணர்,
விளியர், புறக்குடி ஆர்க்கும் நாட! 5
பழகிய பகையும் பிரிவுஇன் னாதே;
முகையேர் இலங்குஎயிற்று இன்னகை மடந்தை
சுடர்புரை திருநுதல் பசப்பத்
தொடர்புயாங்கு விட்டனை? நோகோ யானே!

அழகிய குடியிருப்புக்களிலே வாழ்வோரான குறவர்கள் மலைக்கு அயலிடத்தே தழைத்திருந்த கருதிறங்கொண்ட தினைப்புனத்திடத்தே, துணையினின்றும் பிரிந்த கொடிய யானையானது வந்தடையக் கண்டனர். கணைகளை உடையவரும், கிணைப்பறைகளை உடையவரும், கையிடத்துச் சேர்ந்த கவணிணை உடையவரும், பிறரையும் வருமாறு அழைக்கும் கூப்பீட்டினரும் ஆகக் குடிப்புறத்தே திரண்டு ஆரவாரித்தலைச் செய்யலாயினர். அத்தகைய நாட்டினனாகிய தலைவனே! தொடர்ந்து பழகிய பகையானாலும் அவரைப் பிரிவதென்பது துன்பந்தருவதாய் இருக்கும். இருப்பவும், முல்லை முகைகளைப்போன்று விளங்கு அழகிய பற்களைக் கொண்ட இனிதான மென்னகையினளான தலைவியது. ஒளிகொண்ட அழகிய நெற்றியானது பசலைகொள்ளுமாறு இவளுடைய தொடர்பினை நீதான் எவ்விடத்துக் கைவிட்டனையோ? அதனை எண்ணி நோகின்றாளும் யானே யாவேன்.

கருத்து : 'களவுக் காலத்து இடையீடுபட்டு வருகின்ற, வருகின்ற சிறுபிரிவுக்கே இவள் கலங்கிப் பசந்தாள்; இவளைப் பிரியாதிருக்கும் மணவுறவினைப் பூண்டு இவனைக் காப்பாற்றுக' என்பதாம்.

சொற்பொருள் : களித்தல் – கிளைத்துப் பெருகுதல். மை - எருமை. கடுங்கண்மை – கொடுமை. கணை – அம்பு. கிணை – கிணைப்பறை, விளி – கூப்பீட்டொலி, புறக்குடி – ஊர்ப்புறம். சுடர் – ஒளியெறியும் தன்மை, திரு நுதல் – அழகிய நெற்றி.

விளக்கம் : 'மலையயற் கலித்த மையார் ஏனல்' என்றது தலைவி பகற்குறி பெற்றுக் கூடியதான குறியிடத்தை நினைவுபடுத்திக் கூறியதாம். துணை யானையின் துணையாகிய பிடி; நிறையினின்றும் தனித்து வழிதப்பிய யானையாகக் கொள்ளின், 'துணை' பிற யானைகளையும் குறிப்பதாகலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/213&oldid=1688296" இலிருந்து மீள்விக்கப்பட்டது