உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

நற்றிணை தெளிவுரை


117. பன்னாள் வாழலென்!

பாடியவர் : குன்றியனார்.
திணை : நெய்தல்.
துறை : வரைவு நீட ஆற்றாளாய தலைவி வன்புறை எதிரழிந்து சொல்லியது; சிறைப்புறமும் ஆம்.

[(து–வி.) வரைந்து வருவதாகத் தலைவன் குறித்துச் சென்ற நாளின் எல்லை கழிந்துபோகத், தலைவியின் காமநோய் மிகுதியாகின்றது. அதனைத் தணிக்கக் கருதிய தலைவியின் தோழி, 'அவர்தான் சொற்பிழையாராய் விரைய வருவர்' என வற்புறுத்திக் கூறுகின்றாள். அவளுக்குத் தலைவி கூறுவதாக அமைந்தது இது. (2) தலைவன் சிறைப்புறத்தானாகக் கேட்டு வரைவுக்கு விரையுமாறு கூறுவது சிறைப்புறம் ஆகும்.]

பெருங்கடல் முழங்கக் கானல் மலர
இருங்கழி ஓதம் இல்இறந்து மலிர
வள்ளிதழ் நெய்தல் கூம்பப் புள்ளுடன்
கமழ்பூம் பொதும்பர்க் கட்சி சேரச்
செல்சுடர் மழுங்கச் சிவந்துவாங்கு மண்டிலம் 5
கல்சேர்பு நண்ணிப் படர்அடைபு நடுங்கப்
புலம்பொடு வந்த புன்கண் மாலை
அன்னார் உன்னார் கழியின் பல்நாள்
வாழலென் வாழி தோழி! என்கண்
பிணிபிறி தாகக் கூறுவர்;
பழிபிறி தாகல் பண்புமார் அன்றே 10

தோழீ, நீ வாழ்வாயாக! பெரிதான கடலும் முழக்கம் இடுகின்றது. கானற் சோலைகளுள் எம்மருங்கும் புதுப்பூக்கள் மலர்ந்திருக்கின்றன. கரிய கழியிடத்தினது நீர்ப்பெருக்கம் நம்முடைய வீட்டின் எல்லையைக் கடந்தும் வந்துள்ளது. வளவிய இதழ்களை உடையவான நெய்தல் மலர்களும் குவிந்துவிட்டன. கடற்புட்கள் ஒருசேர மணங்கமழும் மலர்ச்சோலையிடத்தே உள்ளவான தத்தம் கூடுகளிற் சென்று சேர்கின்றன. மறைகின்றதான மாலைக் கதிரவனும் தன் ஒளிமழுங்கச் சிவப்புற்றனனாய், வளைவான வானமண்டிலத்திடத்தே மலைப் பின்னாகச் செல்லுதலை நெருங்கினனாகத் துன்பமடைந்து நடுங்குகின்றனன். என்றன் தனிமைத் துயரோடு துயரைச் சேர்ப்பதாக வந்துள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/231&oldid=1689956" இலிருந்து மீள்விக்கப்பட்டது