உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

297


பேரூர்ப் பெருமையெல்லாம் வாழ்வோர் போகியதும் குன்றிப்போக, அதுதான் பாழிடமாயினாற்போல, தலைவியும் தன் எழிலனைத்தையும் இழந்தாளாகச் சோர்ந்தனள் எனவும் கருதுக. தனிமகன் – ஒருவனேயாக நின்ற வீரன்; ஒப்பற்ற வீரமகனும் ஆம். 'தனக்குரிய நெஞ்சமும் தன் துன்பத்திற்கு உரிய துணையாகாதபோது வேறு எவர்தான் உதவித் தன்னைக் காக்க வியலும்' என்று கருதிச் சோர்ந்ததும் ஆம்.

ஒப்பு : 'மழை தென்புலம் படர்தல்' வாடைக் காலத்தாகும். இதனை, வடபுல வாடைக்கு அழிமழை தென்புலம் படரும் தண்பனி நாள்' என வரும் குறுந்தொகை (317) யானும்; எழிலி தெற்கேர்பு இரங்கும் அற்சிரக் காலையும் எனவும். 'எழிலி தென்புல மருங்கிற் சென்றற்றாங்கு' எனவும் வரும் நற்றிணைச் செய்யுட்களாலும் அறிக— (நற்,5;153). 'வாடை வைகறை, விசும்புரிவதுபோல் வியலிடத்தொழுக, மங்குன் மாமழை தென்புலம் படரும்' எனவரும் அகநானூற்றுச் (24) செய்யுளும் இதனை வலியுறுத்தும்.

154. நிலம் பரந்த நெஞ்சம்!

பாடியவர் : நல்லாவூர் கிழார்.
திணை : குறிஞ்சி
துறை : இரவுக்குறித் தலைவன் சிறைப்புறமாக வரைவு கடாயது.

[(து–வி.) இரவுக் குறியை நாடிவந்த தலைவன், செவ்வி நோக்கி ஒருசார் ஒதுங்கி நிற்கின்றான். தலைவியை வரைந்துகொள்ளுதற்கு விரைதலை வற்புறுத்த நினைத்த தோழி, இவ்வாறு தலைவியிடம் கூறுவாள் போலக் கூறுகின்றாள்.]

கானமும் கம்மென் றன்றே; வானமும்
வரைகிழிப் பன்ன மையிருள் பரப்பிப்
பல்குரல் எழிலி பாடுஓ வாதே;
மஞ்சுதவழ் இறும்பில் களிறுவலம் படுத்த
வெஞ்சின உழுவைப் பேழ்வாய் ஏற்றை 5
அஞ்சுதக உரறும் ஓசை கேளாது
துஞ்சுதி யோஇல தூவி லாட்டி!
பேர் அஞர் பொருத புகர்படு நெஞ்சம்
நீர்அடு நெருப்பின் தணிய இன்றுஅவர்

ந.—19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/298&oldid=1694849" இலிருந்து மீள்விக்கப்பட்டது