உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

321


பயன்தெரி பனுவற் பைதீர் பாண!
நின்வாய்ப் பணிமொழி களையா பல்மாண்
புதுவீ ஞாழலொடு புன்னை தாஅம்
மணம்கமழ் கானல் நாண்நலம் இழந்த
இறைஏர் எல்வளைக் குறுமகள்
பிறைஏர் திருநுதல் பாஅய பசப்பே. 10

புன்னையது மேற்குப்பக்கமாக வளைந்து சாய்ந்திருக்கும் கரிய தண்டினைக் கொண்ட பெருங்கிளையிடத்தே புதுவதாக வந்து தங்கிய வெளிய நாரையானது ஒலி செய்யுமானால், அவ்வொலியானது ஆஅய் அண்டிரது வள்ளன்மையாலே மகிழ்ச்சிகொண்ட நாளோலக்கத்திலே பரிசில் பெற்ற இரவலர்களது பண்ணுதலமைந்த நெடிய தேரினது ஒலியைப் போல ஒலித்தபடியிருக்கும், தண்ணிய கடற்றுறைக்கு உரியோன் தலைவன். அவனுக்காகத் தூதுரைக்கும் ஏவலோடு வந்துள்ளவனே! பயன் தெரிதலுறும் பனுவல்களை வருத்தமின்றிக் கூறிக் காட்டவல்ல பாணனே! நின் வாயிடத்தாக வழங்கும் பணிவான சொற்களைச் கைவிடுவாயாக. பலவான மாண்புகளைக் கொண்ட ஞாழலின் புதுப்பூக்களோடு புன்னையின் புதுப்பூக்களும் உதிர்ந்து கலந்துகிடந்து மணங் கமழுகின்ற கானற்சோலையிடத்தே, நின் தலைவனோடு கொண்ட நட்பினாலே தன் மாண்பு கொண்ட அழகினையெல்லாம இழந்தவள் தலைவியாவாள். சந்திடத்து அழகுற விளங்கும் ஒள்ளியவளைகளைக் கொண்ட இளையோளாகிய இவளது, பிறைபோலும் அழகிய நெற்றியிடத்தே, பரவிய பசலை நோயானது படர்ந்துள்ளது; அதனை நின்சொற் களையா காண்!

கருத்து : 'நின் சொற்களால் இவளது பசலை தீராது; ஆதலின் நீதான் சென்று வருக!' என்பதாம்.

சொற்பொருள் : குடக்கு – மேற்கு. வாங்கல் – வளைதல். விருந்தின் வெண் குருகு – புதுவதாய் வந்தமர்ந்த வெளிய நாரை. நாளவை – நாளோலக்கம். 'பனுவல்' என்றது, இசை நுட்பங்களை வரையறுத்தும் கூறும் நூல்களை; அவற்றை ஐயமறக் கற்றுத் தெளித்தவன் பாணன் எண்பதாம். பணி மொழி – பணிவான சொற்கள்; பண்ணின் இனிக்கும் சொற்களுமாம். இறை – சந்து. ஏர் – பேரழகு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/322&oldid=1696097" இலிருந்து மீள்விக்கப்பட்டது