உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

340

நற்றிணை தெளிவுரை


மலர்ந்த ஒள்ளிய செங்காந்தள், வாழை மரங்களையுடைய சோலைப் பகுதியின் கண்ணே புதுமணம் உண்டாகுமாறு செறிந்திருக்கும்; யாழினை மீட்டி ஒலியெழச் செய்தாலொத்த இனிய குரலினைச் செய்பவான வண்டுக் கூட்டங்கள் அருவியினது முழவொலி போன்ற முழக்கத்தோடு ஒருசேர ஒலித்தனவாய், மெல்ல மெல்ல ஆரவாரித்தபடியிருக்கும்; அத்தகைய மலைச் சாரலிடத்தே, குன்றுகளை வேலியாகக் கொண்ட அவர்கள் இருக்கின்ற ஊரிடத்தே உள்ளவர்கள்தாம் யாது சொல்வார்களோ? அதனை எனக்கும் உரைப்பாயாக!

கருத்து : 'தலைவன் மீளவும் நம்மை நாடி வந்து விடுவான்' என்பதாம்.

சொற்பொருள் : நயந்து – அன்பு செய்து; விருப்பப்படி நடந்து. நலத்தோன் – நலத்தைக் கருதுவோன்; பொருள் நலத்தை உடையோனும் ஆம். சால்பு – பெருந்தன்மை. அளித்தல் – அருளிச் செய்தல். காதலள் – அன்புடையாள். நிரைத்த – நிரையாக நின்ற. வரி – செவ்வரி. போது –அரும்பு, செங்காந்தள் – செந்நிறக் காந்தட் பூ. வம்புபட – புதுமணல் பரவ, ஓர்த்தல் – யாழினை இசைத்தல் முழவின் பாடு – முழவின் முழக்கம். ஓராங்கு – ஒரு தன்மைப்படா குன்றவேலி – குன்றுகளே வேலியாகச் சூழ்ந்த நிலை.

விளக்கம் : பரத்தையின் தோழி 'விறலி' என்பது இயல்பான் உணரப்படுவது. பரத்தை இப்படித் தன் தோழிக்குக் கூறியதைக் கேட்ட தலைவியின் பாங்கிக்கு வேண்டியவர்கள் அதனைப் பாங்கிக்கு உரைக்க, அவளும் தலைவிக்கு உரைப்பள் என்பதாம். தன்னுடைய பெண்மைக் கவர்ச்சியிலும் இளமைச் செவ்வியிலும் பரத்தைக்கு இருந்த நம்பிக்கையின் செறிவும், தலைவனைத் தான் இழந்துவிடலும் நேருமோவென இயல்பாகவே எழுந்த அச்சமும், ஊரவர் குறை கூறுவரோ என்பதனால் உண்டாகிய உணர்வும், அவளை இப்படிக் கூறச் செய்தன என்க.

உள்ளுறை : சிலம்பிற் செங்காந்தள் மலரின் மணம் பரவுதலும், வண்டினம் ஆரவாரித்தபடி அதனை நாடிச் செறுவதனையொப்ப நம்பாலும் பூப்புண்மையை அறிவித்தபடி விறலியாகிய நீதான் பாடியும் ஆடியும் செல்வையானால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/341&oldid=1698665" இலிருந்து மீள்விக்கப்பட்டது