உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

352

நற்றிணை தெளிவுரை


கருத்து : 'களவின்பத்திற்கு உண்டாகும் இடுக்கண்களை உணர்ந்து அவன் நின்னை மணத்து கொள்ளானோ?' என்பதாம்.

சொற்பொருள் : இடனுடை – இடத்தையுடைய; இடம் அகன்ற, வரைப்பு – எல்லை: வீட்டின் உட்புறம் பாவை – சித்திரப்பாவை; பேச்சொழிந்திருந்த நிலையைக் குறித்தது. அடைய – சேர: அழுந்த. முயங்கி – தழுவி. வறுந்தலை –அணியிழந்த தலை; சிறிய தலையும் ஆம். பனி – பனித் துளிகள், அலை நிலை – அலைத்த நிலை; அலைத்தல் – வருத்துதல்.

விளக்கம் : 'நிலவிலே வெளிப்போந்தால் பிறர் அறியக் கூடுமென்னும் அச்சத்தை உடையோம்' என்பாள், 'நிலவு மறைந்தன்று' என்று அது நீங்கினமை கூறினாள். 'இருளும் பட்டன்று' எனக் களவிற்கான செவ்வி தோன்றினும் மீண்டுசெல்லும் தலைவனுக்கு வழியிடை ஏதம் வந்துறுமோவெனத் தாம் அஞ்சுவதைக் குறிப்பாகக் கூறினாள். 'ஓவத் தன்ன' என்றது. இல்லத்தவர் அனைவரும் கண்ணுறங்குதலால் விளங்கிய அமைதி சூழ்ந்த நிலையினைக் குறித்துச் சொன்னதாம்.'புறங் காக்கும்' என்றது. சிறை காவலைக் கூறியது. 'சிறந்த செல்வத்து அன்னை' என்றது, குடிப் பெருமையைச் சொன்னதாம். 'கெடுத்துப்படு நன்கலம்' எனக் குறிப்பாக உரைத்தது, மெலிவினாலே தளர்ந்து சோர்ந்த வளைகளை. 'நன்மார்பு' என்றது நலந்தரும் மார்பு என்பதனால்; நலமாவது தளர்வகற்றி மீளவும் பொலிவைத் தருதல். 'மென்மெல' என்றது, உறங்குவார் விழித்துக் கொள்ளாமைப் பொருட்டு. 'கீழும் மேலும் காப்போர்' என்றது, கீழிருந்து நடத்திச் செல்வோனும், மேலிருந்து செலுத்திச் செல்வோனுமாகிய இருவரையும்; 'அவரை நீத்த' என்றமை, யானைக்கு மதம் பற்றியதனை அறிவுறுத்துவதாம். இரவுக்குறி இடையீடுபடுதற்கான பலவகைக் காரணங்களையும் கூறி, அவன்மீது தாம் கொண்டுள்ள மாறாத காதலையும் உரைத்து, அவனை மணவினைக்கு முற்படுமாறு தூண்டுகின்றாள் தோழி.

'கெட்ட நன்கலனை எடுத்துக் கொண்டாற் பெறும் மகிழ்ச்சி போலக் களவு இடையீடுபட்டதனால் இழந்த களவின்பத்தை மீளவும் பெற்றுக் கொள்ளலாம்' என்பது, அவனைப் போன்றே தாமும் அவனைப் பெரிதும் விரும்பியிருக்கும் நிலையினைக் கூறுவதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/353&oldid=1706385" இலிருந்து மீள்விக்கப்பட்டது