உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

386

நற்றிணை தெளிவுரை


சேயின் வரூஉம் மதவலி! யாஉயர்ந்து
ஓமை நீடிய கானிடை அத்தம்
முன்நாள் உம்பர்க் கழிந்த வென்மகள்
கண்பட நீர்ஆழ்ந் தன்றே தந்தை
தன்னூர் இடவயின் தொழுவேன் நுண்பல் 5
கோடேந்து அல்குல் அரும்பிய திதலை
வார்ந்திலங்கு வாலெயிற்று பொலிந்த தாஅர்
சில்வளை பல்கூந் தலளே அவளே
மையணல் எருத்தின் முன்பின் தடக்கை
வல்வில் அம்பின் எய்யா வண்மகிழ்த் 10
தந்தை தன்ஊர் இதுவே
ஈன்றேன் யானே! பொலிகநும் பெயரே!

சேய்மைக்கண்ணிருந்து வாராநின்ற பெருவலிமையினை உடையோனாகிய தலைவனே! யாமரங்கள் உயரமாக வளர்ந்தும், ஓமை மரங்கள் மிக நெடிதாக வளர்ந்தும் இருக்கின்ற காட்டிடையே செல்லும் வழியினூடாக, நேற்றைப் போதிலே அப்பக்கமாக என் மகளும் சென்றனள். அந்தக் காட்சி என் கண்ணுள்ளே தோன்ற, என் கண்கள் கண்ணீர் வெள்ளத்துள்ளே அமிழா நின்றன. நுண்ணிய பலவாகிய வரிகளோடு பொருந்திய அல்குல் தடத்தினையும், அதனிடத்தே தோன்றிய தேமற்புள்ளிகளையும் உடையாள் அவள். நேர்மையுற்று விளங்கும் வெள்ளிய பற்களையும் அவள் பெற்றுள்ளவள். அழகுசெய்யும் மாலையையும், சிலவாகிய வளைகளையும், பலவாகத் தழைத்த கூந்தலையும் அவள் உடையவள். அவளை வழியிடைக் கண்டீராகிய நும்மை அவளது தந்தையது இல்லத்திடத்தே அழைத்துச் சென்று விருந்தூட்டித் தோழுதும் போற்றுவேன். மைபோலும் கரிய அணலினையும் வளமிகுந்த பெரிய கையினையும், வலி செறிந்த வில்லிடத்தே அம்பினை வைத்துக் குறிபிழையாது எய்யும் ஆற்றலையும், வளவிய மகிழ்வைத் தரும் கள்ளுணவையும் உடைத்தான அவள் தந்தையது ஊர்தானும் இதுவேயாகும். அவளை ஈன்று காத்தவளும் யானே யாவேன். அவர்களை எதிர்கண்டு பேசிய வகையை எனக்குச் சொல்லீராயின் நும் பெயர் என்றைக்கும் புகழுடன் விளங்க வாழ்வீராக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/387&oldid=1711591" இலிருந்து மீள்விக்கப்பட்டது