உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

418

நற்றிணை தெளிவுரை


பாலத்தனார் 52

இவர் பெயர் நப்பாலத்தனார் எனவும் காணப்படும். இச் செய்யுளும் நற்றிணையின் 240 ஆவது செய்யுளும் இவர் பாடியவாகக் காணப்படுவனவாகும். இச் செய்யுளுள் வல்விலோரியின் வள்ளன்மையை இவர் எடுத்துக் கூறுதலால், அவனைப் பாடிப் பரிசில் பெற்றவர் எனக் கருதலாம். பாலையது வெம்மையை நினைந்து 'ஐதே கம்ம இவ்வுலகு படைத்தோனே' எனக் கூறியுள்ளவர் இவராவர் (நற்.240). தலைமகன் தலைவியைப் பிரியவியலாதும், பொருளார்வத்தைத் தடுக்கவியலாதும் தன் நெஞ்சுக்குக் கூறுவதாக அமைந்த இச்செய்யுள் பெரிதும் இன்பம் பயப்பதாகும்.

பிசிராந்தையார் 91

பாண்டிநாட்டுப் பிசிர் என்னும் ஊரினர்; ஆந்தை என்னும் பெயரினர். உறையூரை ஆண்டிருந்த கோப்பெருஞ்சோழனின் உயிர் நண்பராக விளங்கி அவனோடு வடக்கிருந்து உயிர்நீத்த பண்பாளர்; நரைதிரையின்றி நெடுநாள் வாழ்ந்தவர் இவர். அதனைக் குறித்த இவரது புறநானூற்றுச் செய்யுள் (191) பெரிதும் பொருள் நுட்பம் கொண்டதாகும். அரசிறை கொள்ளற்குரிய முறைமையை விளக்கிப் பாண்டியன் அறிவுடை நம்பிக்குக் கூறுவதான செய்யுளும் (புறம் 184) இவரது அறிவாற்றலை நன்கு காட்டுவதாகும். நாரை தன் குஞ்சுக்கு இரையினை வாயிற் பெய்கின்ற பெரும்பாசத்தை இச் செய்யுளால் இவர் நமக்கு எடுத்துக்கூறித் தாய்மையை விளக்கி இன்புறுத்துகின்றனர்.

பிரமசாரி 34

இவர் பெயர் பிரம;சரிய விரதங்கொண்ட சான்றோர் இவரெனக் காட்டுவதாகும் தோழி தெய்வத்துக்கு உரைப்பாளாய் வெறிவிலக்கியதாக அமைந்தது இச் செய்யுள். 'வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்! கடவுள் ஆயினும் ஆக; மடவை மன்ற வாழிய முருகே' என்று முருகனைக் குறமகள் உரிமையோடு கடிந்து கொள்வதாக உரைக்கும் சிறப்பை இச் செய்யுளுட் காணலாம். குன்றத்தினரின் வாழ்வியற் பண்புகளை நன்கு கண்டறிந்தவராகவும் இவரைக் கொள்ளலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/419&oldid=1731076" இலிருந்து மீள்விக்கப்பட்டது