58
நற்றிணை தெளிவுரை
[(து–வி.) (1) தலைமகனின் பிரிவினாலே ஆற்றாளாய் மெலிந்த தலைவிக்குத் தோழி இவ்வாறு சொல்லி ஆற்றுவிக்க முயலுதல். (2) தலைவனது குறையைப் போக்குவதற்கு இசைந்த தோழி, தலைவனின் கருத்தைக் குறிப்பாக அவளுக்கு உணர்த்தி, அவளை இசைவித்தல்.]
என்கைக் கொண்டு தன்கண் ஒற்றியும்,
தன்கைக் கொண்டுஎன் நன்னுதல் நீவியும்,
அன்னை போல இனிய கூறியும்,
கள்வர் போலக் கொடியன் மாதோ
மணிஎன இழிதரும் அருவி, பொன்னென
5
வேங்கை தாய ஓங்குமலை அடுக்கத்து
ஆடுகழை நிவந்த பைங்கண் மூங்கில்
ஓடுமழை கிழிக்கும் சென்னிக்
கோடுஉயர் பிறங்கல், மலைகிழ வோனே!
தோழி! நீலமணியினைப் போலும் தோற்றமுடையதாக இழியும் அருவியையுடைய, பொன்னென்னுமாறு வேங்கைப் பூந்தாது உதிர்ந்து கிடப்பதான உயர்ந்த மலைப்பக்கத்திலே, அசைகின்றதும் கழை உயர்ந்ததுமான பசிய கணுக்களையுடைய மூங்கிலானது, வானத்தே ஓடுகின்ற கார்மேகத்தைக் கிழிக்கின்ற உச்சியையுடைய கொடுமுடிகள் உயர்ந்த பிறங்குதலாகிய மலைக்கு உரியவன் தலைவன். அவன்தான், முன்னர் நம்மைத் தலையளி செய்ததான அந்த நாளிலே, என் கைகளைக் கொண்டு கண்களிலே ஒற்றிக் கொண்டும், தன் கைகளாலே என் நறிய நெற்றியைத் ஒற்றிக் தடவி விட்டும், அன்னையேபோல நமக்கு இனிமை தருவனவான சொற்கள் பலவற்றைக் கூறியும், நம்மை இன்புறுத்தினான். இந்நாளிலோ, வஞ்சத்தாற் பிறரது பொருளைக் கவர்ந்து சென்று, அவரைப் பற்றி நினையாதே போகும் கள்வரைப்போலக் கொடுந்தன்மையினனாகவும் ஆயினான்.
கருத்து : 'அவன் செயலை நினைந்து வாடி நலனழியா திருத்தலே இனிச் செய்யத்தக்கது' என்பதாம்.
சொற்பொருள் : மணி – நீலமணி. நிவந்த – ஓங்கிவளர்ந்த. கிழிக்கும் – ஊடறுத்துச் சிதைக்கும். கோடு – கொடுமுடி
விளக்கம் : தலைவனைத் தோழி இவ்வாறு 'கள்வர் போலக் கொடிய'னெனப் பழிக்கவும், அதனைப் பொறுக்காத தலைவி, அவனது சால்பையும், தான் ஆற்றியிருப்பதே