உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

நற்றிணை தெளிவுரை


'ஓரெயில் மன்னன்' அதனைக் கைவிட்டகன்று வேறு சென்று வாழ்தற்கும் போக்கற்ற நிலையினன் ஆகின்றான். அவ்வாறே, இவ்வுடலைப் பசலைக்கு இரையாக தலைவியின் உயிரும், வேறு புகலிடம் காணாதே சென்றொழியும் என்கின்றனள்.

இறைச்சி : 'செந்நாய் தின்று கழித்த மரையாவின் ஊன் வழிச்செல்வார்க்கு உணவாகு மென்றதனாலே, நீ நுகர்ந்து கைவிட்டகன்ற இவளது மேனியின் எழிலினைப் பசலைநோய் பற்றி யுண்ணும் என்பதாம்.

44. நினக்கோ அறியக்கூடியவள்?

பாடியவர் : பெருங்கௌசிகனார்.
திணை: குறிஞ்சி
துறை : இற்செறிப்பின் பிற்றைஞான்று, தலைமகன் குறியிடத்து வந்து சொல்லியது.

[(து–வி) தலைவியது களவுறவை உணர்ந்த தமர், அவளை இற்சிறையிட்டுக் காத்தலைத் தொடங்கியதன் பிற்றைநாள், வழக்கம்போலக் குறியிடத்திற்கு வந்த தலைவன், அவளை வரக்காணாது கலங்குகின்றான். அவன், தன் மனத்தோடு சொல்லி நோவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

பொருஇல் ஆயமொடு அருவி ஆடி
நீர் அலைச் சிவந்த பேர்அமர் மழைக்கண்
குறியா நோக்கமொடு முறுவல் நல்கி
மனைவயின் பெயர்ந்த காலை, நினைஇய
நினக்கே அறியுநள் நெஞ்சே! புனத்த 5
நீடிலை விளைதினைக் கொடுங்கால் நிமிரக்
கொழுங்குரல் கோடல் கண்ணிச் செழும்பல
பல்கிளைக் குரவர் அல்கயர் முன்றில்
குடக்காய் ஆசினிப் படப்பை நீடிய
பல்மர உயர்சினை மின்மினி விளக்கத்துச் 10
செல்மழை இயக்கம் காணும்
நல்மலை நாடன் காதல் மகளே?

நெஞ்சமே! புனத்திடத்தே, நீண்ட இலைகளையுடைய முற்றிய தினைப்பயிரது வளைந்த தாள் நிமிர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/89&oldid=1731404" இலிருந்து மீள்விக்கப்பட்டது