பகவத் கீதை முதலிய நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன். சபையோர் பிரமிப்படையும் முறையில் பிரமாண்டமான காட்சிகளைப் பெரும் பொருட் செலவில் தயாரித்த பெருமை சி. கன்னையா அவர்களுக்கே உரியது.
விளம்பரங்கள் செய்வதில் இவர் மிகத் திறமையானவர். சென்னை ராயல் தியேட்டரில் நடைபெற்ற இவரது தசாவதார நாடகத்திற்குத் திருநெல்வேலியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டனவென்றால், அந்த நாளில் அது பெரிய வியப்புக்குரிய செய்தி அல்லவா? 'த்ரீ டைமன்ஷன்' என்று இப்போது சொல்லுகிறோமே, அப்படிப்பட்ட கனபரிமாணக் காட்சிகளுக்கு முதன் முதலாகத் தமிழ் நாடக மேடையில் வித்திட்டு வளர்த்தவர் திரு.சி.கன்னையா அவர்கள்தாம். மின்சார வசதிகள் இன்றைய அளவுக்கு வளர்ச்சி பெறாத அந்த நாளில் அவர் காட்டிய அற்புதக் காட்சிகளை இன்று எண்ணிப் பார்த்தாலும் திகைப்பூட்டுவதாக இருக்கிறது. திரு. சி. கன்னையா அவர்களைப் பின்பற்றி மதுரை ஒரிஜனல் பாய்ஸ் கம்பெனி, பால மீன ரஞ்சனி சங்கீத சபை, ஸ்ரீ பால ஷண்முகானந்த சபா முதலிய நாடக சபைகள் காட்சியமைப்பு முறையில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கின. பொதுவாக அன்றிருந்த எல்லா நாடகச் சபைகளுக்கும் காட்சிகளைப் பொறுத்தவரையில் திரு.சி. கன்னையா அவர்களே வழிகாட்டியாக இருந்தார் எனக் குறிப்பிடுவது முற்றிலும் பொருந்தும்.
நாடகத்திற்குத் தடை
1931-ல் நாங்கள் திரு.வே. சாமிநாத சர்மா அவர்கள் எழுதிய பாணபுரத்து வீரன் என்னும் தேசீயப்